Breaking News

இத்தாலி மேற்பிராந்தியத்தில் நடைபெற்ற தமிழ் இன அழிப்பு நாள் மே 18 நிகழ்வுகள்

மேற்பிராந்தியத்தில் வியல்லா, றெஜியோ எமிலியா, பொலோணியா,
நாப்போலி , ஜெனோவா, லேச்சே ஆகிய நகரங்களில் தமிழ் இன அழிப்பு நாள் நிகழ்வுகள் நடைபெற்றது.


வியல்லா: முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட  எமது உறவுகளிற்கு அவர்கள் உயிர் பிரிந்த இடங்களில் ஓர் அடையாளச்சின்னம் வைப்பதற்கோ , வணக்கம் செலுத்துவதற்கோ உரிமை மறுக்கப்பட செய்தியை வெளிப்படுத்துவதற்காக 17-05-2014 நகரசபையால் நிர்வகிக்கப்படும் திறிவேறோ மயானம் சிரமதானப் பணிமூலம் சுத்தம் செய்யப்பட்டது. இப்பணிக்கு உள்ளுர் ஊடகங்கள் முன்னுரிமை கொடுத்து செய்கள் வெளியிட்டிருந்தன.





18-05-2014 காலை 11.00 மணிக்கு வியல்லாவில் மக்கள் கூடுதலாக நடமாடும் பகுதியில் உமது உறவுகளிற்கு சிங்கள அரசால் நடாத்தப்பட்ட , பட்டுக்கொண்டிருக்கும் இன அழிப்புக்களை வெளிப்படுத்தும் புகைப்படங்களும், துண்டுப்பிரசுர வினியோகமும் தமிழ் இளையோர் அமைப்பால் மேற்கொள்ளப்பட்டது. பிற்பகல் 16.00 மணிக்கு முள்ளிவாய்காலில் மனச்சாவெய்திய எமது மக்களிற்கும் , இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த போராளிகள் தளபதிகளிற்கு நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றது. பிரதான ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம் சுடர்வணக்கம், மலர் வணக்கம் நடைபெற்றதை தொடர்ந்து இத்தாலி, தமிழ் மொழியில் இனப்படுகொலை தொடர்பான உரைகள் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளை இத்தாலி மக்கள் உணர்வு பூர்வமாக பார்வையிட்டு சென்றதை உணர முடிந்தது. நிகழ்வுகள் 18.00 மணியளவில் நிறைவேறின.






றேஜியோ எமிலியா : பிற்பகல் 17.00 மணிக்கு இத்தாலி மக்கள் கூடுதலாக நடமாடும் இடத்தில் பொதுச்சுடரேற்றல், அகவணக்கம, மலர்வணக்கத்துடன் இத்தாலி, தமிழ் மொழிகளில் இனப்படுகொலை தொடர்பான உரைகள் இடம் பெற்றன தமிழ் இளையோர் அமைப்பால் இத்தாலி மொழியிலான துண்டுப்பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. இத்தாலி மக்கள் மிகவும் ஆர்வமாக பெற்றுச்சென்றனர்.






பொலோணியா : திலீபன் தமிழ்ச்சோலை மண்டபத்தில் மதியம் 1 மணிக்கு நினைவு வணக்க நிகழ்வுகள் நடைபெற்றதை தொடர்ந்து தமிழினப் படுகொலையை வெளிப்படுத்துவதற்காக சிரமதானப் பணியும் மேற்கொள்ளப்பட்டது.





ஜெனோவா, நாப்போலி ஆகிய பிரதேசங்களில் உள்ளரங்குகளில் நினைவு வணக்க நிகழ்வுகள் நிறைவு பொற்றன.