Breaking News

டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.   


இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று  மெல்போர்னில் நடைபெற்றது.  சமநிலையில் முடிந்த இந்த போட்டியை அடுத்து அவுஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.   

இந்த நிலையில் போட்டி முடிந்த பின்னர் இந்திய அணித்தலைவர் டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் இனி கோஹ்லி டெஸ்ட் அணியை வழிநடத்துவார் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.  

 டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதன் மூலம் அவரது 9 ஆண்டுகால சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது, இதுவரையிலும் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டோனி 144 இன்னிங்சில் 4876 ஓட்டங்களை எடுத்துள்ளார்.   6 சதங்களையும், 33 அரை சதங்களையும் எடுத்துள்ள டோனியின் அதிகபட்ச ஸ்கோர் 224 ஆகும்.   60 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ள டோனியின் இந்த திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.   

டெஸ்ட் போட்டிகளில் டோனியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என தொடர்ந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்ததே இதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் தெரியவருகிறது.     மேலும் ஜனவரி மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவுடனான 4 ஆவதும் இறுதியுமான  டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அணித்தலைவராக கடமையாற்றுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.