Breaking News

இடைக்கால வரவு செலவுத்திட்டம் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.


வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க விசேட உரையாற்றுவார்.

இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது. ஆரம்பத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்து உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரை நிகழ்த்துவார்.

பிற்பகல் 1.15 மணிமுதல் 3 மணி வரை வரவு செலவுத்திட்டம் மீதான உரை இடம்பெறும்.

அரச உத்தியோகத்தர்களின் சம்பள உயர்வு மற்றும் குறைந்தது 10 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்புடன் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இந்த இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்களுக்கான நிவாரணப் பொதிகள், தனியார் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்கள் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்று இந்த வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.