Breaking News

ஆட்டம் ஆரம்பம்: களையெடுக்கப்படும் மகிந்த விசுவாசிகள்!

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பெரிய பொறுப் புக்களில் உள்ள மகிந்த ஆதரவாளர்களை களை யெடுக்கும் அதிரடி நடவடிக்கையை ஜனாதிபதி மைத்திரி ஆரம்பித்துள்ளார். 

சத்தமில்லாமல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையினால், மகிநத விசுவாசிகளான பல மாவட்ட அமைப்பாளர்களின் தலைகள் உருள்கின்றன. இது தவிர, பல தொகுதி அமைப்பாளர்களின் தலைகளும் குறிவைக்கப்பட்டுள்ளன. இவர்களின் மாற்றங்களை ஜனநாயக முறைப்படி செய்யும் நாசூக்கையும் மைத்திரி கடைப்பிடிக்கிறார். கட்சியின் மத்தியகுழுவிற்கு இந்த மாற்றங்கள் பற்றிய விபரத்தை அனுப்பி, அதன் சம்மதத்துடன் அனைத்தும் நடப்பதால், மகிந்த விசுவாசிகள் விழிபிதுங்கிப் போய் நிற்கிறார்கள்.

மகிந்தவின் கோட்டைகளான குருநாகல், அநுராதபுரம் மற்றும் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர்களின் தலைகள் முதற்கட்டமாக உருளவுள்ளன.மகிந்தவிற்காக உயிரையும் விட தயாராக உள்ளதாக அண்மைநாட்களாக மேடைகளில் பேசிவரும் தொகுதி அமைப்பாளர்களின் தலைகளும் குறிவைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது. இவர்களின் இடங்களிற்கு மைத்திரியின் ஆதரவாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.