Breaking News

தேசிய அரசில் இணைகிறார் சமல் ராஜபக்ச

தேசிய அரசாங்கத்தில் தாமும் இணைந்து கொள்ளப் போவதாகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுக்கும் முடிவுகளுக்கு தாம் கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச.

மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்ச, தனது இந்த முடிவை கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். அரசியலில் கொள்கையும் ஒழுக்கமும் முக்கியம். கட்சித் தலைவரின் முடிவை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்வது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை.நாம் கட்சியில் இருக்க வேண்டுமானால், கட்சித் தலைவரின் முடிவுகளை ஏற்றுச் செயற்பட வேண்டும்.அதை ஏற்றுச் செயற்பட முடியாது போனால், அவர்கள் கட்சியை விட்டுப் போகலாம்.

இந்த இரண்டு தெரிவுகள் மட்டும் தான் உள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தேசிய அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து கொண்டாலும், தாம் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக, மகிந்த ராஜபக்சவும், அவரது மகன் நாமல் ராஜபக்சவும் அறிவித்துள்ள நிலையிலேயே, சமல் ராஜபக்ச தேசிய அரசாங்கத்தில் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.