Breaking News

போர்க்குற்றம் குறித்து எவ்வித விசாரணையும் தேவையில்லையாம்!

இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு விசாரணையும் தேவையில்லை என்று தயான் ஜயதிலக வலியுறுத்தியுள்ளார்.

முதலாவது வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாகத்தில் அமைச்சுப் பதவி வகித்தவரும், சிரேஷ்ட ராஜதந்திரியுமான தயான் ஜயதிலக்க இது குறித்து விசேட நேர்காணல் ஒன்றை ரிவிர பத்திரிகைக்கு வழங்கியுள்ளார்.

அதில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள தயான் ஜயதிலக, உலகின் எந்தவொரு நாடும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி தண்டனை அளித்த வரலாறு இல்லை. அவ்வாறு விசாரணை நடத்திய நாடுகளும் பல வருடங்கள் கழிந்த பின் ஒப்புக்காகவே போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்தன. எனினும் அதன் மூலம் யாரும் தண்டிக்கபட்டதே இல்லை.

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்குப் பதிலாக குறித்த விடயங்கள் தொடர்பான ஞாபகங்களை காலப் போக்கில் மறக்கச் செய்யும் முயற்சிகளையே மேற்கொள்ள வேண்டும். அது தொடர்பான விடயங்களை தோண்டித் துருவாமல் காலங்கள் கடந்த பின்பு நடைபெற்ற தவறுகளுக்கு நியாயங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அத்துடன் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். மற்றபடி போர்க்குற்ற விசாரணைகள் இதற்கான பரிகாரம் இல்லை.

தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள உள்ளக போர்க்குற்ற விசாரணையானது அமெரிக்காவின் சதித்திட்டமாகும். இது நாட்டுக்கு ஆபத்தானது என்றும் தயான் ஜயதிலக தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.