Breaking News

ஓமந்தை சோதனை சாவடி அகற்றப்பட்டது; பதிவு இன்றி செல்லவும் அனுமதி

வவுனியா ஓமந்தை பகுதியில் சுமார் 20 வருடங்களுக்கு
மேலாக இயங்கி வந்த சோதனைச்சாவடி இன்று சனிக்கிழமை முதல் அகற்றப்பட்டுள்ளதுடன் வடக்கில் இருந்து தெற்கிற்கும் தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும் வாகனங்கள் மற்றும் பொது மக்கள் பதிவு மேற்கொள்ளாது செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியாக சர்ச்சைக்குரிய சோதனைச்சாவடியாகவும் இறுதி யுத்த காலத்தில் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்த பலர் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்படும் இச் சோதனைச்சாவடி, யுத்தகாலத்தில் பொதுமக்களுக்கு சிம்மசொப்பனமாக அமைந்திருந்ததுடன் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கப்பட்ட பலரால் இச் சோதனைச்சாவடியில் ஒப்படைக்கப்பட்ட பலர் காணாமல் போனதாக சாட்சியமும் பதிவுசெய்யப்பட்டிருந்தது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் அமெரிக்க பிரதிநிதியொருவர் கொழும்புக்கு விஜயம்செய்திருந்த சமயம் இச் சோதனைச் சாவடியில் பதிவு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு மறுநாளில் இருந்து மீண்டும் பதிவு மேற்கொள்ளப்பட்டது. 

இதேவேளை இச் சோதனை சாவடி அமைந்துள்ள பிரதேசம் பொது மக்களின் காணியாக காணப்படுவதை சுட்டிக்காட்டி காணி உரிமையாளர்களால் மனித உரிமை நிறுவனங்களில் மூலமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.