Breaking News

தேசியப் பட்டியல் : பொன்சேகாவுக்கு வழங்குவதாக கருத்துக்கள் இல்லை – கிரியல்ல

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு தேசியப் பட்டியல் ஊடாக ஆசனம் வழங்குவது குறித்து அரசாங்கத் தரப்பு எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு மிகவும் பொருத்தமான ஒருவர் நியமிக்கப்படுவார் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும் தேசியப் பட்டியல் ஆசனம் குறித்து தீர்மானிப்பார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ம் திகதி புதிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது தேசியப் பட்டியல் உறுப்பினராக குணவர்தன நியமிக்கப்பட்டிருந்தார். அவர் காலமானதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இதுவரையில் எந்தவொரு உறுப்பினரும் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளதாகவும், 9ம் திகதி அவர் பதவியேற்கவுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.