Breaking News

மகிந்த கைதுசெய்யப்படுவாரா? வெலிக்கடை சிறைச்சாலை அவசரமாக புனரமைக்கப்படுகிறது!

பிரபல சிங்கள நடிகர் விஜய குமாரதுங்க, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்க உள்ளிட்ட முக்கிய நபர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த வெலிக்கடை சிறைச்சாலையின் எஸ் தொகுதியை அவசரமாக புனரமைப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கையில் முக்கிய நபர்கள் கைதுசெய்யப்படும் போது குறித்த எஸ் தொகுதியிலேயே அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.தற்போது சிறைச்சாலை களஞ்சியப் பிரிவின் கீழ், குறித்த கட்டடத்தொகுதி வெள்ளைபூசப்பட்டு, கவனத்தை ஈர்க்கும் வகையில் புனரமைக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் மிகவும் பிரபலமான நபர் ஒருவர் விரைவில் கைதாகக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதுவே குறித்த சிறைத்தொகுதி அவசரமாக புனரமைக்கப்படுவதற்குக் காரணமாக இருக்கலாம் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, போரின் போது படைத் தளபதியாக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கைதுசெய்வதே நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச அண்மையில் தெரிவித்திருந்தார்.

''நாட்டை காப்பாற்றிய தலைவரை சிறைவைக்கும் வரை இந்த நிலை நீடிக்கும்'' என யோசித்த ராஜபக்ச கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது, அரசியல் ஆதரவாளர்களுடன் கூடியிருந்த விமல் வீரவங்ச ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.