Breaking News

அண்ணன் மைத்திரி தரப்பில், தம்பி மஹிந்த அணியில்!



நீர்கொழும்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகளான லான்சா தரப்பினர் மேதினக் கூட்டத்தின் போது பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலையும் காட்டும் அரசியல் செயற்பாட்டில் இறங்கியுள்ளனர்.

கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நிமல் லான்சா முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தீவிர ஆதரவாளராக இருந்த போதும் நல்லாட்சி அரசாங்கத்தில் அவருக்கும் பிரதியமைச்சுப் பதவியொன்று கிடைத்திருந்தது.

இதன் காரணமாக மைத்திரி தரப்பில் இணைந்து செயலாற்றும் அவர் மேதினக் கூட்டத்தின் போதும் காலியில் நடைபெறும் மைத்திரி தரப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.

நிமல் லான்சாவின் தம்பியான தயான் லான்சா, தனது அண்ணணின் செல்வாக்கில் கட்சியின் மூத்த அரசியல்வாதிகளை ஓரங்கட்டிவிட்டு அண்மையில் நீர்கொழும்பின் பிரதி முதல்வர் பதவியை பிடித்துக் கொண்டிருந்தார்.

எனினும் தொடர்ந்தும் மஹிந்த தரப்பை ஆதரித்த அவர் நாளை நடைபெறவுள்ள மேதினக் கூட்டத்தின் போது தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு கிருலப்பனையில் நடைபெறும் கூட்டு எதிர்க்கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.

இதன் மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சூட்சுமமான முறையில் சுதந்திரக் கட்சியின் இரண்டு அணிகளையும் ஒருசேர சமாளித்துக் கொண்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.