Breaking News

ஜெயா அம்மையாரே ஈழத் தமிழ் அகதிகளை ஏமாற்றியது போதும்.


இன்னும் எத்தனை காலம்தான் ஈழத்தமிழர்களை வைத்து இவர்கள் அரசியல் பிழைப்பு நடத்தப் போகிறார்கள்?

செய்தி- ஈழ அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை கிடைக்கச் செய்வேன்- ஜெயா அம்மையார் தேர்தல் வாக்குறுதி. தமிழக தேர்தல் களத்தில் இதுவரை நாம்தமிழர் கட்சி சீமான் மட்டுமே ஈழத் தமிழர் நலன்கள் குறித்து பேசி வருகிறார். தற்போது ஜெயா அம்மையாரும் பேசியுள்ளார். எனவே இனி அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் பேச ஆரம்பிப்பார்கள் என நம்பலாம். ஜெயா அம்மையாரும் கலைஞர் கருணாநிதியும் தேர்தல் காலங்களில் ஈழத் தமிழர் குறித்து பேசுவதும் ஆட்சிக்கு வந்ததும் அது குறித்து கண்டுகொள்ளாமல் விடுவதுமாக இருக்கிறார்கள்.


அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை என்பது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட விடயமாகும். எனவே ஜெயா அம்மையாரால் கடிதம் அனுப்பலாம் அல்லது தீர்மானம் நிறைவேற்றலாம். அவ்வளவே! இதுவரை மௌனமாக ஆட்சியில் இருந்தவர் இப்போது எதற்காக ஈழ அகதிகள் மீது ஜெயா அம்மையாருக்கு அக்கறை ஏற்பட்டுள்ளது? இவருக்கு உண்மையிலே ஈழ அகதிகள் மீது அக்கறை இருக்குமானால்,

•ஏன் சிறப்பு முகாம்களை மூடி அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யவில்லை?

•ஏன் அகதிமுகாம்களில் உள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பை அளிக்கவில்லை?

•ஏன் அகதிமுகாம்களில் நிலவும் அதிகாரிகளின் கெடுபிடிகளை நீக்கவில்லை?

•ஏன் மதுரையில் ஈழ அகதி ஒருவர் தற்கொலை செயய காரணமாய் இருந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை?

•ஏன் கும்மிடிப்பூண்டி முகாமில் உள்ள அகதியின் காலை முறித்த பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை?

•ஏன் மண்டபம் முகாமில் உள்ள அகதிப் பெண்ணi பாலியல் வல்லுறவு செய்த நான்கு பொலிசார் இன்னும் கைது செய்யவில்லை?

ஜெயா அம்மையார் அவர்களே!

இதுவரை ஈழத் தமிழ் அகதிகளை ஏமாற்றியது போதும். இனியும் உங்கள் பதவி நலன்களுக்காக அந்த அப்பாவி அகதிகளை பலியாக்க வேண்டாம். உண்மையில் உங்களுக்கு அகதிகள் மீது அக்கறை இருந்தால் முதலில் உங்கள் அதிகாரத்தின் கீழ் உள்ள சிறப்புமுகாம்களை மூடி அதில் அடைத்து வைத்திருக்கும் அப்பாவி அகதிகளை விடுதலை செய்யுங்கள். அதன்பின்பு வேண்டுமானால் இரட்டை குடியுரிமை பற்றி தாராளமாக பேசுங்கள்.