Breaking News

தீர்வு கிட்டாவிடில் அரசாங்கத்தில் இருந்து விலகுவேன் - மிரட்டும் பிரதியமைச்சர்

இன்றைக்குள் தனது கோரிக்கைகள் தொடர்பில் தீர்வு வழங்காவிடில் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாக, பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும தெரிவித்துள்ளார். 

தனது ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் பெற்றோரின் 10 பிள்ளைகளுக்கு மீகஹதென்ன பாடசாலை ஒன்றில் இடமளிக்கப்படாமைக்கு கடந்த 27ம் திகதி, தேவரப்பெரும, பெற்றோருடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டார். 

மதுகம வலய அலுவலகத்துக்கு முன்னால் தற்போதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர், குறித்த மாணவர்களை பாடசாலையில் இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு இல்லையாயின் தனது போராட்டத்தை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமாக மேற்கொள்ளவுள்ளதாகவும் முன்னதாக கூறியிருந்தார். 

எதுஎவ்வாறு இருப்பினும், குறித்த மாணவர்களை பாடசாலையில் இணைத்துக் கொள்ளவில்லையாயின் அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாகவும், தொடர்ந்தும் அரசுக்கு எதிராக செயற்படவுள்ளதாகவும், இன்று காலை அவர் குறிப்பிட்டார்.