Breaking News

ஆரம்பநிலையிலேயே இலங்கை நிற்கிறது – ஐரோப்பிய ஒன்றியம்



போருடன் தொடர்புடைய பொறுப்புக்கூறல் செயல்முறைகளில், அனைத்துலக பங்களிப்பை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் உரையாற்றிய, நெதர்லாந்து தூதுவர், ரொடெறிக் வான் ஸ்கிரேவன், “நீண்ட செயல்முறையின் ஆரம்பக் கட்டத்திலேயே சிறிலங்கா இன்னமும் இருக்கிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சிறிலங்கா அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளில் இன்னமும் நிறைவேற்றப்பட வேண்டியவை அதிகம் உள்ளன.நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி என்பனவற்றை உள்ளடக்கிய இந்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

நம்பகமானது என்பதை உறுதிப்படுத்துவதற்கு, பொறுப்புக்கூறல் பொறிமுறையில் அனைத்துலக பங்களிப்பு மிகவும் அவசியமானது. பயங்கரவாத தடைச்சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நீக்க வேண்டும்.

சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். வடக்கு, கிழக்கில் இயல்பு வாழ்வை ஏற்படுத்த வேண்டும். தடுப்புக்காவலில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும் அல்லது சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

பாதுகாப்புப் படையினரின் பாலியல் மற்றும் பாலினத்தை அடிப்படையாக கொண்ட வன்முறைச் சம்பவங்களை தடுக்க வேண்டும். அவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் செயற்பாடுகளில் தலையீடு செய்வதில் இருந்து இராணுவம் விலக்கப்பட வேண்டும், எஞ்சியுள்ள காணிகளையும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

சிறிலங்கா தொடர்பாக கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த, ஐரோப்பிய ஒன்றியம் ஒத்துழைக்கத் தயாராக உள்ளது” என்று தெரிவித்தார்.