எத்தகைய பேதமுமின்றி எல்லோருக்கும் பொதுவான சட்டம் நிலைநாட்டப்படும் – ஜனாதிபதி
எத்தகைய பேதமுமின்றி ‘சட்டம் எல்லோருக்கும் பொதுவானது’ என்ற கொள்கையை நடைமுறைப டுத்துவதற்கு தமது ஆட்சிக் காலப்பகுதியில் தாம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று (29) பிற்பகல் மூதூரில் இடம்பெற்ற மூதூர் மாவட்ட நீதிமன்றத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நீதி நிர்வாகப் பொறிமுறையை வலுவூட்டி மக்களுக்கு வினைத்திறனான நீதிச் சேவையைப் பெற்றுக்கொடுத்து சட்ட ஆட்சியைப் பாதுகாக்கும் நல்லாட்சி அரச கொள்கைக்கு ஏற்ப நீதி அமைச்சினால் 33 மில்லியன் ரூபா செலவில் இந்த நீதிமன்றக் கட்டிடத் தொகுதி நிர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டின் 62 இலட்சத்து ஐம்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தம்மை ஜனாதிபதியாக தெரிவுசெய்து எதிர்பார்த்த முக்கிய விடயங்களில் சுயாதீனமானதும் பாரபட்சமற்றதும் நடுநிலையானதுமான சட்ட முறைமையை நாட்டில் கட்டியெழுப்புவது முதன்மையானதாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்காக தாம் அதிகூடிய கடப்பாட்டுடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.
சட்டத் தீர்வுகளைத் தேடிவரும் பொது மக்களுக்கு அத்தீர்வுகளை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் காலதாமதம் எல்லோருடையவும் உடனடி கவனத்தைப் பெறவேண்டிய ஒரு விடயம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அக்கால தாமதத்தை தவிர்ப்பதற்காக அரசாங்கத்தினால் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளடங்கிய முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு முன்வைக்குமாறு தாம் பிரதம நீதியரசர் உள்ளிட்ட சட்டத் துறையில் உள்ள எல்லோரிடமும் ஒரு திறந்த கோரிக்கையை முன்வைப்பதாகவும் குறிப்பிட்டார்.
அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, ரவுப் ஹகீம், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாந்து, முதலமைச்சர் நசீர் அஹமட், பிரதம நீதியரசர் கே. ஸ்ரீ பவன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.