Breaking News

காணாமல் போனவர்களை கண்டறியும் கடப்பாடு நல்லாட்சிக்கு உண்டு: ரணில்



காணாமல் போனவர்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றனர் என்ற உணர்விலேயே அவர்களது உறவினர்கள் இருந்து வருகின்றனர். ஆகவே அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய வேண்டிய கடப்பாடு தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி பழைய மாணவர்கள் சங்க ஏற்பாட்டில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம விருந்திரனராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி ஏற்பட்ட மாற்றத்திற்கு தமிழ் மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தேர்ந்தெடுத்து பாரிய வரலாற்று மாற்றத்தினை ஏற்படுத்தினர்.

இலங்கையிலுள்ள அனைத்து மக்கள் குழுக்களையும் இலங்கையர் என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கிறோம். தந்தை செல்வநாயகத்தின் காலத்தில் குறிப்பாக 1979 ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம், 2009 ஆம் ஆண்டு வரையில் யுத்தம் தொடரவும் இன முரண்பாடுகள் வளர்ச்சியடைவதற்கும் காரணமாக இருந்தது.

மேலும் இலங்கையில் ஏற்பட்ட சிவில் யுத்தம் வெறுமனே இனங்களுக்கிடையே மட்டுமல்ல. இதனை விடவும் இலங்கைக்குள் அதாவது வடக்கு பகுதியில் வாழும் மக்களிடையே மற்றும் தென்பகுதியில் வாழும் மக்களுக்கிடையிலும் பயங்கரவாதம் பரவியிருந்தது.

குறிப்பாக தென்பகுதியில் 1977, 1979 ஆம் ஆண்டுகளில் வடக்கு, கிழக்கை பொறுத்தமட்டில் பல சந்ததியினருக்கிடையில் யுத்தம் மற்றும் அதன் பாதிப்புகள் பரவியிருந்தது. ஐக்கிய தேசிய கட்சி வடக்கு மற்றும் தெற்கு மக்களுக்கிடையில் சுமுகமான உறவை ஏற்படுத்துவதில் அக்கறையுடன் செயற்பட்டு வந்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்க்கட்சியின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. மேலும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு என்பது நீண்டகால பொறிமுறையை கொண்டதாக காணப்படுகின்றது.

இதில் இரண்டு பிரதான பிரச்சினைகள் காணப்படுகின்றன. முதலாவதாக யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதன் பின்னரான காலத்திலும் காணாமல் போன மக்கள் என்ன ஆனார்கள் என்பது தொடர்பிலும் அவர்களை கண்டறிய வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் நல்லாட்சி அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்தின் மூலம் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் காணாமல் போன தங்களது உறவுகள் இன்னும் உயிருடன் இருக்கின்றார்கள் எனும் உணர்ச்சிபூர்வமான நிலையில் மக்கள் உள்ளனர். எனவே நாம் இது தொடர்பில் கூர்மையாக ஆராய வேண்டும்.

அடுத்ததாக உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மூலம் நல்லிணக்க செயற்பாடுகளில் உண்மையை கண்டறிவதன் அவசியம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது.

சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சமயங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதற்கு சமயச் சபைகள் அதிக பங்களிப்பு செலுத்துகின்றன’ என தெரிவித்துள்ளார்.