Breaking News

அமித்ஷாவின் சவாலுக்கு தயார் - நாங்கள் டெல்லியையே கைப்பற்றுவோம்: மம்தா பானர்ஜி பதிலடி

டெல்லி நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, மேற்கு வங்காளத்தில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது தான் பாரதிய ஜனதாவின் அடுத்த இலக்கு என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அமித்ஷாவின் சவாலுக்கு தயார் என்று கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியை கைப்பற்றுவோம் என்று சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி கூறுகையில், ”என்னுடன் மோதுபவர்களின் சவால்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். நாங்கள் டெல்லியை கைப்பற்றுவோம். திரிணாமூல் காங்கிரஸை பா.ஜ.க. அச்சுறுத்த முயற்சிக்கிறது. டெல்லியில் இருந்து வந்து பொய்களை பரப்புகின்றனர். மேற்குவங்கத்தில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக முயற்சிக்கின்றனர். அவர்களால் குஜராத்தை சமாளிக்க முடியாது. ஆனால் மேற்கு வங்கத்தை குறி பார்க்கிறார்கள்” என்றார்.

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக அமித்ஷா கொல்கத்தாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பாரதிய ஜனதாவை பார்த்து பயப்படுகிறார். எங்கள் மீது உள்ள அச்சத்தால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதாவின் வளர்ச்சியை பார்த்து மிரண்டு போய் இருக்கிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் அப்பட்டமான ஊழலில் ஈடுபடுகிறது. அந்த கட்சியில் உள்ள தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது.

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசை ஆட்சியில் இருந்து அகற்றுவதே எங்களது தலையாய பணியாகும். இந்த ஆட்சி வகுப்பு கலவரத்தை அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.