Breaking News

பெற்றோர் அவதானத்துடன் செயல்பட வேண்டும்!

 


சமூகத்தில் பரவும் கொவிட் - 19 இன் பாதிப்பு இலங்கையில் தொடர்ச்சியாக இருந்து வருவதனால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களையும், குழந்தைகளையும் பொது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு பிரச்சாரங்களில் பங்கேற்க அழைத்துச் செல்ல வேண்டாம் என்று குழந்தைகள் நல மருத்துவ ஆலோசகர், வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

´கொவிட் வைரசு தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து காணப்படுவதால், பெற்றோர் அவதானத்துடன் செயல்பட வேண்டும். பொது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்´ என்று வைத்தியர் பெரேரா கூறினார்.

பொரளை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் தற்போது சுமார் 10 குழந்தைகள் கொவிட்-19 நோய்க்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட் - 19 தொற்று நாட்டில் இருந்து வருகிறது. கொவிட்-19 தொற்று குறித்து தற்போது பலர் மறந்துவிட்டனர். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்படாததால், பெற்றோர் மற்றும் பெரியவர்களின் கவனக்குறைவான மற்றும் பொறுப்பற்ற நடத்தை காரணமாக அவர்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகிறார்கள் என்றும் வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.