Breaking News

கடலில் தவித்த 150 இலங்கையர்கள் கிறிஸ்மஸ் தீவை அடைந்தனர் ?


ஆஸ்திரேலிய கடற்பரப்பில் இரண்டு நாட்களாக
தத்தளித்துவந்த படகில் இருந்த இலங்கைத் தமிழர்கள் கிறிஸ்மஸ் தீவை அடைந்துவிட்டதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் வந்துள்ள போதிலும், அதிகாரிகளிடமிருந்து உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில், படகில் இருந்தவர்களின் நிலை குறித்து ஆஸ்திரேலிய அகதிகளுக்கான செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அகதிகள் மீட்கப்பட்டதை அரசாங்க அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தாத நிலையிலும், கடலில் குறிப்பிடத்தக்க அசம்பாவித சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கிறிஸ்மஸ் தீவிலிருந்து பலநூறு கிலோமீட்டர்கள் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்தப் படகில் 150க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் இருந்ததாக அகதிகளுக்கான தொண்டு நிறுவனம் ஒன்றின் (Refugee Action Coalition ) இணைப்பதிகாரியான இயன் ரிண்டுல் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

'கடந்த 2 நாட்களாக நாங்கள் அந்தப் படகில் இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தோம். ஆனால் கடந்த 9 மணிநேரமாக அவர்களுடன் நாங்கள் பேசவில்லை. அவர்களின் நிலைமை தொடர்பில் எங்களுக்கு கவலைகள் இருக்கின்றன' என்று உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் இயன் ரிண்டுல் கூறினார்.


ஆஸ்திரேலியாவில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்திருக்கின்ற முதலாவது படகு இது என்றும் அவர் கூறினார். இந்தோனேசியாவைக் கடந்து படகுகள் மூலம் தஞ்சம்கோரி வருபவர்களை இந்தோனேசியாவுக்கே ஆஸ்திரேலிய அரசாங்கம் திருப்பி அனுப்பிவருகின்றது.

ஆனால், இந்தியாவிலிருந்து புறப்பட்டிருக்கின்ற இந்தப் படகில் இருந்தவர்களை மனுஸ் தீவு அல்லது நவ்றூ தீவு முகாம்களுக்கு அதிகாரிகள் அனுப்பக்கூடும் என்று இயன் ரிண்டுல் நம்புகின்றார். இந்தப் படகில் 37 சிறார்களும் அதே அளவான பெண்களும் இருந்துள்ளனர். படகு மூலம் வருபவர்களை திருப்பி அனுப்பும் ஆஸ்திரேலியாவின் கொள்கையை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் விமர்சிக்கின்றன.

இலங்கையில் யுத்தம் முடிந்து 5 ஆண்டுகளாகின்ற போதிலும் அங்கு நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் இருந்து தப்பி பாதுகாப்புத் தேடுவோரே பெரும்பாலும் தமது உயிரைத் துச்சமாக மதித்து படகுப் பயணங்களில் ஆஸ்திரேலியா வருவதாக ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸை சேர்ந்த பாலா விக்னேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

அதேநேரம், பொருளாதார அகதிகளாகவே இலங்கையர்கள் ஆஸ்திரேலியாவுக்கு படகுகளில் செல்வதாக இலங்கை அதிகாரிகள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.