Breaking News

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 36

பண்டிவிரிச்சானிலிருந்து பின்வாங்கியமை, பரப்புக்கடந்தானைக் கைவிட்டமை கீதாவின் வீரச்சாவு என்பன சிவத்தின்
மனதை இனம்புரியாத துயரத்தில் தள்ளிவிட்டன. மேற்படி சம்பவங்களால் அவன் சோர்வடைந்துவிடாதபோதிலும் அவை அடிக்கடி நினைவில் வந்து அவன் மனதை உறுத்திக்கொண்டிருந்தன.

முன்னாள் மன்னார் மாவட்டக் கட்டளைத் தளபதி விக்ரர் மன்னார் மக்களால் தமிழினத்தின் மீட்பர்களில் ஒருவனாகவே கருதப்பட்டான். அவன் அடம்பனில் வீரச்சாவடைந்த போது முழு வட பகுதியுமே கண்ணீர்விட்டுக் கதறியது. அவனின் நினைவாலயம் பரப்புக்கடந்தானிலேயே அமைக்கப்பட்டிருந்தது. பரப்புக்கடந்தானிலும் அதைனச் சுற்றியுள்ள ஊர்களிலும் ஒரு வீட்டுக்கு வெளியிடங்களிலிருந்து விருந்தாளிகள் சென்றால் வீட்டுக்காரர் முதலில் விக்ரரின் நினைவாலயத்துக்கே அழைத்துச் செல்வர். அங்கு அஞ்சலி செலுத்திய பின்பே வீட்டில் கூட்டிச் சென்று உபசரிப்பார்கள்.

அந்தளவிற்கு விக்ரர் அந்த மக்களின் நெஞ்சில் ஒரு உயர்வான இடத்தைப் பிடித்திருந்தான். தற்சமயம் விக்ரரின் சமாதி உள்ள இடம் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதை அறிந்த போது அதைச் சிவத்தால் ஜீரணிக்க முடியவில்லை. ஆயிரம் போராளிகளைப் பலிகொடுத்தாவது அந்த இடத்தைத் தக்க வைத்திருக்க வேண்டுமென்றே அவனுக்குத் தோன்றியது. ஆனால் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் சிவத்தின் துயரங்களையுப் போக்கடிப்பவையாகவிருந்தன. கீரிசுட்டானிலிருந்தும் எவ்வித எதிர்ப்புமின்றி முன்னேறிய இராணுவம் தட்சிணாமருதமடுவை நெருங்குமுன்பே போராளிகளின் எறிகணை வலைப்பின்னலுக்குள் அகப்பட்டுக்கொண்டது. முன்னேற முயன்றவர்கள் பொறிவெடி வயலில் சிக்கி காயமடைந்துவிழுந்தனர்.

வாகனக் கண்ணிகளில் சிக்கிய டாங்கிகள் செயின் அறுந்து நகரமுடியாமல் தடுமாறின. துருப்புக்காவிகளையும் கவச வண்டிகளையும் பாம்பு பங்கர்களால் பதுங்கி வந்த போராளிகளின் ஆர்.பி.ஜிகள் பதம் பார்த்தன. ஒரு போராளிகூட வீரச்சாவடையாமல் இரு போராளிகள் மட்டும் காயமடைந்த நிலையில் இரு பெரும் இராணுவப் படையணிகள் அழிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டன. 

பரப்புக்கடந்தானில் நிலை கொண்டிருந்த இராணுவம் ஏனோ முன்னேற முயற்சிக்கவில்லை. அப்படி அவர்கள் முயற்சி மேற்கொள்ளாமைக்கு ஒரு பக்கத்தில் பெரியமடுவை உடைத்து முன்னேறி, மறுபுறத்தில் பாப்பாமோட்டையால் பள்ளமடு நோக்கி வந்து போராளிகளைச் சுற்றி வளைக்க அவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என சிவம் கருதினான். எனினும் பெரியமடுவை உடைக்கும் நோக்கம் சிதறடிக்கப்பட்டுவிட்டது. அதேபோன்று தள்ளாடி முகாமுக்குள் நடத்தப்பட்ட இரு கரும்புலித் தாக்குதல்களும் அங்கிருந்து முன்னேற முயலும் முயற்சிக்கே ஆப்பு வைத்துவிட்டன.

ஆட்டிலறி தளத்தின் மீது விழுந்த இரு எறிகணைகளும் முற்றாகவே அதைச் சிதைத்துவிட்டன. அவ்வாறே வாகனத் தொடரணி மீது விழுந்து மூன்று எறிகணைகளும் இலங்குத் தவறாமல் தாக்குதலை வெற்றிகரமாக்கிவிட்டன. எறிகணைப் பெட்டிகள் அடுக்கிவைக்கப்பட்ட வாகனத்தில் விழுந்த எறிகணை அவற்றை வெடிக்கச் செய்துவிட்டது. அவை நாலா புறமும் சீறிப்பாய்ந்து பல படையினரைப் பலி கொண்டன. பல கட்டிடங்களைச் சேதமாக்கின.

எங்கும் தீயும் கரும்புகையும் பரவி அகோரத் தாண்டவம் ஆடின. படையினருக்கு பங்கர்களில் பதுங்குவதையும் முகாமை விட்டு வெளியே ஓடுவதையும் விட வேறு வழியிருக்கவில்லை. பொழுது விடிந்த போது சத்தங்கள் மெல்ல, மெல்ல ஓய ஆரம்பித்தன. அதிகாரிகளின் கட்டளைகளும், படையினர் அங்குமிங்கும் ஓடுவதும் ஆரம்பமாகிவிட்டன. அன்று காலை பத்து மணிக்கே கொழும்பிலிருந்து விசாரணைக்குழு உலங்கு வானூர்தியில் வந்து இறங்கியது.

அவர்கள் பல கோணங்களில் விசாரணைகளை நடத்தியும், கரும்புலிகள் முகாமுக்குள் இறங்கியிருந்தனர் என்பதை மட்டுமே முடிவு செய்யமுடிந்தது. அதன் பின்பு எப்படி தொடர் வெடிப்புக்கள் இடம்பெற்றன என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மனிதக் குண்டுகள் வெடித்திருப்பதற்கான ஆதாரங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்தடுத்த நாட்களில் மேலும் சில நிபுணர்கள் வந்து விசாணைகளையும் ஆய்வுகளையும் நடத்திய போதிலும் மேலதிகமாக எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இறுதியில் இந்தியத் தொழில்நுட்பவியலாளர்கள் வந்து ‘பிக்ஸ்’ அடிக்கப்பட்டு அதை இலக்காக வைத்து ஆட்டிலறிகள் ஏவப்பட்டதைக் கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில் காவலரண்களில் நின்ற சில படையினரும் ரோந்துப் பணியில் ஈடுபட்ட சிலரும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். தள்ளாடி முகாம் தளபதியும் இடமாற்றம் செய்யப்பட்டார்.

மேலும் ‘றாடர்’, கண்காணிப்புக்குப் பொறுப்பாக இருந்த இந்திய படை அதிகாரிகளும் அனுப்பப்பட்டனர். அவர்கள் பாலியாற்றிலிருந்து அதிகாலை முழங்காவில் நோக்கிப் புறப்படுவதென முடிவெடுத்துவிட்டுப் படுத்த அன்று இரவு இரண்டு மணியளவில் கேட்ட வெடிச்சத்தங்கள் தங்கள் முடிவை மாற்ற வேண்டியிருக்குமெனக் கருத வைத்துவிட்டன. தள்ளாடிப் பக்கம் கேட்ட தொடர் வெடிச் சத்தங்கள் போராளிகளால் தள்ளாடி முகாம் தாக்கப்படுவதாய் நம்ப வைத்துவிட்டன.

முகாம் தாக்குதல் வெற்றி பெற்றால் தாங்கள் விரைவில் பாலம்பிட்டிக்கே போய்விடலாம் என நம்பினர். அன்றிரவு இரண்டு மணியின் பின்பு அவர்கள் எவருமே தூங்கவில்லை. அவர்கள் ஒரு விதமான சந்தோசத்தில் மிதந்துகொண்டிருந்தனர். அடுத்த நாள் காலை பத்துமணியளவில் தான் அவர்களுக்கு இடம்பெற்றது முகாம் தாக்குதல் அல்ல என்பதும் எறிகணை வீச்சில் ஆயுதங்கள் வெடித்தச் சிதறிய சத்தம் தான் என்பதையும் அவர்கள் தெரிந்து கொண்டனர்.

சுந்தரம் முற்றாகவே சோர்வடைந்துவிட்டான். அவன் தகப்பனிடம் போய், “ஐயா.. பின்னேரம் வெளிக்கிடுவமே?” எனக் கேட்டான். அவரும், “ம்.. வேறை என்ன தான் செய்யுறது.. சாப்பிட எதாவது வழி பாக்கத்தானே வேணும்.. முழங்காவில் பக்கம் போய் ஏதாவது பயிர் பச்சையைச் செய்வம்”, என்றார். அன்று மாலையே அவர்கள் முழங்காவில் நோக்கிப் புறப்பட்டுவிட்டனர்.

சிவம் இந்த இடைவெளியில் ஒரு ஊடுருவல் தாக்குதலுக்குக் கட்டளை வருமெனவும், மீண்டும் தாங்கள் தங்கள் பழைய நிலைகளுக்கே போய்விட முடியுமெனவும் எதிர்பார்த்துக் காத்திருந்தான். அந்த மூன்று வாரங்களில் அப்படி எதுவுமே இடம்பெறவில்லை. அவனுக்கு அந்த நிலை பெரும் ஏமாற்றமாகவேயிருந்தது. இந்த அமைதியின் பின்னால் கட்டளைத் தளபதி ஒரு பெரும் திட்டம் வகுத்திருப்பார் என எண்ணி அவன் தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டான்.

பரமசிவம் குடும்பத்தினர், பெருமாள் குடும்பத்தினர், முருகரப்பு, முருகேசர், முத்தையா எல்லோருமே முழுங்காவிலில் வேலுப்பிள்ளையின் காணியில் குடியேறிவிட்டனர். வேலுப்பிள்ளை அவர்களைக் கண்டதுமே மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். வேலுப்பிள்ளை வருடா வருடம் முழங்காவில் பிள்ளையார் கோவிலில் ‘காத்தவராயன் கூத்து’ போடுவதுண்டு. கூத்து பழக்க அவர் அண்ணாவியாரையே அழைப்பதுண்டு.

அதன் காரணமாக ஏற்பட்ட தொடர்புகள் அவர்களுள் நல்ல நட்பாக மாறிவிட்டிருந்தன. வேலுப்பிள்ளையின் காணியில் நிறைய தென்னைகள் இருந்ததால் ஓலைகளுக்குப் பஞ்சமிருக்கவில்லை. சுந்தரம் காய்ந்த ஓலைகளை நனைத்துவெட்டிப்பிளந்து கொடுக்க பார்வதியும் வேலாயியும் முத்தம்மாவும் தேவையான கிடுகுகளைப் பின்னி எடுத்துக் கொண்டனர். வேலுப்பிள்ளை தன்னிடமிருந்த காட்டுத்தடிகளைக் கொடுக்க இரு நாட்களிலேயே மூன்று கொட்டில்கள் போடப்பட்டுவிட்டன. ஆனால் சமையல் எல்லோருக்கும் பரமசிவம் வீட்டுப் பானையில் தான்.

பரமசிவத்தின் தடிகளையும் தகரங்களையும் கொண்டு போய் முத்தையா முழங்காவில் பிள்ளையார் கோவிலடியில் ஒரு சிறு தேனீர் கடை போட்டுவிட்டார். பலகாரங்களை முத்தம்மாவும் வேலாயியும் செய்து கொடுத்தனர். சுந்தரம் சில மரக்கறி விதைகளை நாற்றுப் போட்டிருந்தான். அவை முளை விட்டு வளர ஆரம்பித்துவிட்டன.

முழங்காவிலுக்கு வந்த பின்பு நிவாரணத்துக்கோ அல்லது வேறு எவரிடமோ கையேந்தாமல் வாழ முடியும் என்ற நம்பிக்கை அவருள் துளிவிட ஆரம்பித்துவிட்டது. முருகரப்புவும் வேலுப்பிள்ளையின் நாய் ஒன்றைக் கொண்டு உடும்பு வேட்டை முயல் வேட்டைக்குப் போய்வர ஆரம்பித்துவிட்டார். ஆஸ்பத்திரி அண்மையிலேயே அமைந்திருந்ததால் முருகேசருக்கும் பெருமாளுக்கும்கூட பிரச்சினை இருக்கவில்லை. எப்பிடியிருந்த போதும் சுந்தரத்துக்கும் தான் கைவிட்டு வந்த மிளகாய்த் தோட்டத்தை நினைக்கும் போது கவலையும் கோபமும் கொண்ட ஒரு உணர்வினால் அலைக்கழிக்கப்பட்டான்.

அப்படியான நேரங்களில் உடனடியாக பாலம்பிட்டிக்குப் போகவேண்டும் போல் ஒரு ஆவேசமும் அவனுள் எழும். பின்பு அப்படியான ஒரு முடிவைத் தான் மட்டும் எடுப்பதால் எவ்வித பயனுமில்லை என உணர்ந்து தன்னை அடக்கிக் கொள்வான்.

சிவத்தைப் பொறுத்தவரையில் அந்த மூன்று வார அமைதி ஏதோ ஒரு பெரும் புயலின் முன்னறிவித்தல் போலவே அவனை நினைக்க வைத்தது. படையினர் அண்மை நாட்களில் சந்தித்த பேரிழப்புக்கள் காரணமாக தம்மை மீளமைப்பதற்காக இந்த அமைதியை வலிந்து ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் தனது கட்டளைப் பீடம் ஏன் எந்த ஒரு நடவடிக்கையிலும் இறங்காமல் இருக்கிறது என்பதை அவனால் புரிந்து கொள்ளமுடியில்லை. அன்று இரவு அவன் காவல்நிலைகளைக் கண்காணிக்கச் சென்ற போது ரூபாவைச் சந்தித்தான்.

அவளில் ஏதோ ஒரு வித சோர்வு ஏற்பட்டிருப்பது போலவே சிவத்துக்குத் தோன்றியது. “என்ன.. ரூபா.. எப்பிடியிருக்குது நிலைமையள்?”, எனக் கேட்டான் அவன். சில விநாடிகள் மௌனத்தின் பின் அவள் சொன்னாள், “ஒரே சப்பெண்டிருக்குது.. பண்டிவிரிச்சானிலையிருந்து பின்வாங்கேக்க இரண்டு மூண்டு நாளிலையிலை திரும்பிப் போகலாம் எண்டு நினைச்சம். இப்ப மூண்டு கிழமையாகியும் அப்பிடியே தான் இருக்கிறம்.. ஆனால்…”, “சொல்லுங்கோ.. ஏன் நிப்பாட்டிப்போட்டியள்?”

“பள்ளமடுப்பக்கம் பெரிய மண்ணணையள்.. காவலரண்கள் எல்லாம் அமைக்கினமாம்.. சாப்பாடு கொண்டு வந்த போராளியள் சொல்லிச்சினம்”, “அதிலை என்ன பிரச்சினை?” “எங்களை இன்னும் பின்வாங்கச் சொல்லிவிடுவினமோ எண்டு யோசினையாய்க் கிடக்குது”, என்றாள் ரூபா தயக்கத்துடன்.

“அப்பிடி இருக்காது”, என்றான் சிவம் திடமான குரலில். “அப்பிடி இல்லாவிட்டால் நல்லது தான்”, என்று விட்டு அந்த விஷயத்தை அத்துடன் முடித்த ரூபா, “கணேஸ் உங்களோட கதைச்சவரே?”, எனக் கேட்டாள். “இல்லை.. ஆனால் கடைசியாயக் கதைக்கேக்க தான் இப்ப பீரங்கிப் படையணியின்ரை கணணிப் பிரிவிலை இணைஞ்சிட்டதாய் சொன்னவன்”, ரூபா ஒரு மெல்லிய புன்னகையுடன் சொன்னாள், “அவர் எங்கை போனாலும் அந்தத் துறையிலை கலக்குவார்” “உண்மை தான்”, என்றுவிட்டு விடைபெற்றான் சிவம்.

சிறிது நேரத்தில் சிவத்துக்கு கட்டளை பீடத்திலிருந்து அவசர அழைப்பு வந்தது. உடனடியாகவே அங்கு போய்ச் சேர்ந்தான். இரவு அரசியல் துறையின் படையணி வந்து காவல் நிலைகளைப் பொறுப்பேற்கும் எனவும் சிவத்தின் அணியும், மகளிர் அணியும் சிறப்புப் படையணிகளாச் செயற்படும் தேவைகளுக்காக பள்ளமடுவுக்கு வரும்படியும் கட்டளையிடப்பட்டது. சிவத்துக்கு ஏன் மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளமுடியவில்லை.

எனினும் கட்டளைக்குக் கீழ்ப்படியத்தானே வேண்டும். அவன் சோர்வுடன் தனது இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

-தமிழ்லீடருக்கு அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 01
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 02
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 03
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 04
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 05
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 06
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 07
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 08
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 09
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 10
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 11
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 12
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 13
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 14
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 15
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 16
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 17
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 18
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 19
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 20
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 21
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 22
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 23
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 24