போராட்டத்தின் பலன்களை சரியாக பயன்படுத்தி அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும்!
போராளிகளினதும் மக்களினதும் தியாகங்கள் வீணாகவில்லை எனவும் அவர்களின் அர்ப்பணிப்புக்களே எமது பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுத் தந்திருக்கின்றன எனவும் அவற்றை சரியாக பயன்படுத்தி அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா, ஓமந்தையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“கடந்த முப்பது வருட போராட்டத்தில் ஆயிரக்கணக்கான போராளிகளுகம் மக்களும் பல்வேறு தியாங்களை செய்திருகின்றார்கள். அவர்களின் தியாகங்கள் வீணாகிப் போய் விட்டதாக சிலர் கூறுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
ஆனால், எங்களுடைய மக்களின் தியாகங்கள் தோற்றுப் போகவில்லை என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது எங்களுடைய பிரச்சினைகள் சர்வதேச ரீதியில் பேசப்படுவதற்கும் சர்சதேச நாடுகள் எம்மை நாடி வந்து பேசுவதற்கும் அந்த தியாகங்களும் அப்பணிப்புக்களும் தான் வழியேற்படுத்தி தந்திருக்கின்றன.
எனவே, போராட்டத்தின் பலனாக கிடைத்த வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தி எமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்ததார்