Breaking News

10 இணையத் தளங்களுக்கெதிராக சிறிதரன் காவல்துறையில் முறைப்பாடு!



தனது உத்தியோகபூர்வ பதவி முத்திரையையும், நாடாளுமன்ற கடிதத் தலைப்பையும் மிகவும் மோசமான முறையில் மோசடி பயன்படுத்தியமை தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் 10 இணையத் தளங்கள், 16 சமூக வலைத்தளங்கள் மற்றும் அரியரத்தினத்திற்கும் எதிராக கிளிநொச்சி காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாடானது சபாநாயகர் கரு ஜெயசூரியவின் அறிவுறுத்தலுக்கமைய, பாரிய குற்றச் செயலின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பியதாக கடிதமொன்று இணையத்தளங்களில் வெளியாகியிருந்தது.

இக்கடிதமானது, தனது நாடாளுமன்ற பதவி முத்திரை மற்றும் கடிதத் தலைப்பைக் களவாடி தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி தான் எழுதியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தமது தேவைக்கேற்றவாறு எழுதி சமூக வலைத்தளங்களிலும், இணையத் தளங்களிலும் சிலர் செய்தியாக வெளியிட்டுள்ளார்கள்.

குறித்த செயல் தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் இலங்கை நாடாளுமன்ற இலட்சினைகளை அவமதித்து மோசடி செய்தமை போன்றும் அமைந்திருப்பதாக, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சிறிதரன் எம்.பி முறையிட்டிருந்தார்.

இதனை பாரதூரமான குற்றமாகக் கருதிய சபாநாயகர், காவல்துறையில் பாரதூரமான குற்றவியல் சட்டத்தின் கீழ் முறைப்பாட்டைப் பதிவுசெய்யுமாறு தெரிவித்தார்.

இதனையடுத்து, வடமாகாணசபை உறுப்பினர் அரியரத்தினம் மீது முறைப்பாடு செய்துள்ளதுடன், 10 இணையத்தளங்கள் மீதும் 16 சமூக வலைத்தளங்கள் மீதும் முறைப்பாட்டினைப் பதிவு செய்துள்ளார்.