Breaking News

நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், ஸ்ரீதரன் பற்றிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளன - சி.வி.கே.சிவஞானம்

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்டவர்கள் பற்றிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டியவர் எம்.ஏ.சுமந்திரன் என கட்சியின் தலைமைக்கு கடிதம் அனுப்பியிருந்தார். 

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக இன்று ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், 

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் அவர் அந்தக் கடிதத்தினை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதம் எனக்குக் கிடைத்துள்ளது. 

அவரால் அனுப்பப்பட்ட கடிதத்தினை நான் இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. அதனை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் சமர்ப்பித்து, விடயங்களை ஆராய்ந்து அந்தக் குழுவில் இருப்பவர்கள் யார் என்பதையும் ஆராய்ந்து தீர்மானித்து முறைப்பாடு பரிசீலிக்கப்படும். 

இதேவேளை, தவராசாவின் முறைப்பாடு மட்டுமல்லாது ஏற்கனவே வேறு பல முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. சுமந்திரன், ஸ்ரீதரன் மற்றும் குணாளனுடைய முறைப்பாடுகள் என பல முறைப்பாடுகள் இருக்கின்றன. எனவே, இவ்விடயங்கள் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டார்.