Breaking News

யாழில் பொலிசாரால் இரவோடு இரவாக அகற்றப்பட்ட தியாகி திலீபனின் நினைவிடம்!

யாழ்ப்பாணத்தில் தியாகி திலீபனின் நினைவு நிகழ்விற்காக அமைக்கப்பட்ட அலங்காரங்கள், திலீபனின் உரவப்படம் என்பன பொலிசாரால் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளன. 

தியாகி திலீபனின் நினைவஞ்சலியின் தொடக்க நாள் இன்றாகும். இதை முன்னிட்டு, தியாகி திலீபனிற்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்த தயாராகியிருந்தனர். அரசியல் கட்சிகள், பொதுஅமைப்புக்கள், பொதுமக்கள், மாணவர்கள் என இதற்கான ஏற்பாடுகளை பல தரப்பினரும் செய்து வந்தனர். 

இந்த நிலையில் தியாகி திலீபனின் நினைவு நாள் இன்று (15) ஆரம்பிக்கவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைகழகம், நல்லூர் திலீபன் நினைவுத்தூபியில் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறிய கொட்டகை அமைக்கப்பட்டு, திலீபனின் உருவப்படமும் வைக்கப்பட்டிருந்தது. நேற்று நள்ளிரவு பொலிசார் அவற்றை அகற்றியுள்ளனர். 

நேற்று மாலை யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள், திலீபனின் நினைவஞ்சலி ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது, சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்று தடையேற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. 

இந்த நிலையில் நேற்று இரவு திலீபனின் நனைவுத்தூபி, யாழ் பல்கலைகழக வளாகத்திலிருந்த சிவப்பு மஞ்சள் கொடிகள், திலீபனின் உருவப்படம் பொலிசாரால் அகற்றப்பட்டது.