Breaking News

பல்கலைகழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை தடுக்க விசேட திட்டம்!

பல்கலைகழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை தடுப்பதற்காக புலனாய்வு பிரிவினரின் உதவிகளை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு பாதுகாப்பு செயலாளர் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, பல்கலைகழகங்களில் இடம்பெறும் பகிடிவதை சம்பவங்கள், புலனாய்வு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அடையளம் காணப்படுகின்ற சந்தேகநபர்களை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 

சட்டத்திற்கு அமைய, பல்கலைகழகங்களில் புதிய மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டதன் பின்னர், அவர்களது இணக்கமின்றி முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளும் பகிடிவதை என அடையாளப்படுத்தப்படுகிறது. அவ்வாறான செயற்பாடுகள் மாணவர்களுக்கு உடல் மற்றும் உள ரீதியான தாக்கத்தை செலுத்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பகிடிவதைகள் காரணமாக பல்கலைகழகங்களில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு அது நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.