Breaking News

ஜனாதிபதியின் புதிய விசேட திட்டம் - மகிழ்ச்சியில் மக்கள்!

மக்கள் மத்தியில் சென்று, அவர்கள் முகங்கொடுத்து வருகின்ற பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக இனங்கண்டு தாமதிக்காமல் தீர்வுகளை வழங்குவதற்காக, கிராமங்களுக்குச் செல்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார். 

இந்தத் திட்டத்தின் முதல் விஜயமாக பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை பிரதேச செயலகப் பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளது.   

ஹப்புத்தளை 100 ஏக்கர் கிராமத்தில், குமாரதென்ன பாடசாலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மக்கள் சந்திப்பு இடம்பெறவுள்ளது. 

வாழ்வாதார பிரச்சினை, காணி, வீடின்மை, காணி உறுதிகள் இல்லாதிருத்தல், சுகாதாரம், போக்குவரத்து சேவைகள் போதுமானதாக இல்லாமை என்பன அவ்வாறு இனங்காணப்பட்ட பிரச்சினைகளில் முதன்மையானவையாகும். 



அத்துடன், மாணவர்களின் கல்வி பிரச்சினைகள், பாடசாலையில் நிலவும் குறைபாடுகள், விவசாய மற்றும் குடிநீர் பிரச்சினை, காட்டு யானைகளினால் ஏற்படும் பிரச்சினைகள், விவசாய உற்பத்திகளை விற்பனை செய்துகொள்ள இயலாமை முதலான பிரச்சினைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.  

கிராமிய மக்களுக்கு உள்ள கஷ்டங்களை புரிந்துகொண்டு, அவற்றை உடனடியாக தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய அரச நிறுவனங்களின் ஊதாசீனம் மற்றும் செயற்திறனின்மை போன்றவை பிரிதொரு பிரச்சினையாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில், தீர்ப்பதற்கு காலம் எடுக்கக்கூடிய பிரச்சினைகள் மாத்திரம், பின்னர் தீர்த்து வைப்பதற்காக குறித்துக்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.