காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை இன்று திருமலையில்
காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இன்று சனிக்கிழமைமுதல் திருகோணமலை மாவட்டத்தில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
இன்று முதல் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த ஆணைக்குழு திருகோணமலை மாவட்டத்தில் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை சாட்சியங்களைப் பதிவுசெய்யவுள்ளது. அத்துடன்,இன்று சனி மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமைகளில் மூதூர் பிரதேச செயலகத்தில் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளன. அவ்விரு தினங்களில் மூதூர் சேருவில,ஈச்சிலம்,பற்று மற்றும் கிண்ணியா, தம்பலகாமம் ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 326 பேர் சாட்சியமளிப்பதற்கென அழைக்கப்பட்டுள்ளார்கள்.
29 ஆம் திகதி மற்றும் 30ஆம் திகதிகளில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் காணாமல் போனோர் பற்றிய சாட்சியங்கள் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அத்துடன் மொறவெவ பதவிசிறிபுர கோமரங்கடவெல ,குச்சவெளி கந்தளாய் ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவிலுள்ளவர்கள் சாட்சியமளிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன
திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் 29ஆம் திகதி திங்களன்று இடம்பெறும் சாட்சியமளிப்புக்காக 181 விண்ணப்பதாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனினும் இதுவரை தமது உறவுகள் காணாமல் போனது பற்றி காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு விண்ணப்பிக்காதோர் விசாரணை நடைபெறும் அனைத்து தினங்களிலும் புதிதாக தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாகவும் ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் இந்த அமர்வுடன் காணாமல் போனோர் தொடர்பான சகல முறைப்பாடுகளையும் நிறைவு செய்வதற்கு தமது ஆணைக்குழு முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். வழமையான தமது விசாரணையில் நாளொன்றுக்கு 60 பேரின் விசாரணை மனுக்கள் விசாரிக்கப்பட்டு வந்ததாகவும் ஆனால் இம்முறை நாளொன்றுக்கு 120 பேர் என்ற அடிப்படையில் விசாரிக்கப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
அதற்கேற்றபடி ஆணைக்குழுவில் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.ஏ.திலகரத்ன ரத்னாயக்க மற்றும் அமைச்சுக்களின் ஓய்வு பெற்ற செயலாளர் ஹேவாஹெற்றிகே சுமணபால ஆகிய இரு அங்கத்தவர்கள் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதகவும் ஆணைக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.திருகொமலை மாவட்டத்தில் நடைபெறும் இரண்டாவது அமர்வுகள் இதுவாகும் கடந்த அமர்வை காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் எதிர்த்திருந்தனர்