Breaking News

லண்டனிலும் சுமந்திரனின் இரகசிய சந்திப்பு




சிறிலங்கா அரசாங்கத்திற்கும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் இடையில் பிரித்தானியத் தலைநகர் லண்டனில் இடம்பெற்ற இரகசிய சந்திப்புக்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்புக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கவேண்டாம் என்று சுமந்திரனால் சுரேன் சுரேந்திரனுக்கு கண்டிப்பான உத்தரவு வழங்கப்பட்டதாகவும் இருந்தும் இதில் கலந்துகொண்ட சிங்கள பிரதிநிதிகள் தங்கள் முகநூல் மற்றும் ருவிற்றர் பக்கங்களில் இந்த சந்திப்புதொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை சுவிஸ்ஸர்லாந்து அரசும், தென் ஆபிரிக்காவின் ஐ.ரீ.ஐ என்ற மாற்றத்திற்கான முன்முயற்சி என்ற அமைப்பும் இணைந்து பிரித்தானியத் தலைநகர் லண்டனில் நேற்றும் இன்றும் நடத்திய இந்த ரகசிய சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டுள்ள போதிலும், அந்தக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் இந்த இரகசிய சந்திப்புகளுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். 

லண்டனில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ரஜீவ வீரசிங்க,எம்.ஏ.சுமந்திரன் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளரான சுரேன் சுரேந்திரன், மருத்துவர் ரமணன் பஞ்சாட்சரம் ஆகியோர் கலந்துகொண்டனர். சர்வதேச சமூகத்தின் சார்பில் நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹேய்ம், இலங்கைக்கான முன்னாள் சுவிஸ் தூதுவராலயத்தின் சமாதான நடவடிக்கைகளுக்கான ஆலோசகர் மார்டீன் ஸ்டர்சிங்க மற்றும் தென்னாபிரிக்க அரசின் முக்கிய உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர். 

போருக்குப் பின்னரான இலங்கையில் இனங்களுக்கிடையில் மீள் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது குறித்து ஆராயும் நோக்கிலேயே, மோதலுடன் தொடர்புபட்ட இரு தரப்பினருத் பிரதிநிதிகளுக்கிடையில் இந்த சந்திப்பை ஏற்பாடுசெய்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்தக் கூட்டத்தின் தொடர்ச்சியாக நாளையும், நாளை மறுதினமும் டுபாயிலும் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. 

இதில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரனதுங்கவும் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் நல்லிணக்கம் என்ற வார்த்தையை முன்வைத்து முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் பின்னணியில் சதித்திட்டங்கள் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டுகின்றார். 

தொடர்புடைய முன்னைய செய்தி

சிங்கப்பூரில் இடம்பெற்ற இரகசியப் பேச்சுவார்த்தை!