Breaking News

பாராளுமன்றத் தேர்தல் : த.தே.ம.முன்னணி தனித்துப் போட்டி

இலங்கையின் வடமாகாணசபைத் தேர்தலை புறக்கணித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

எனினும் யாருடனும் கூட்டணி சேராமால் தமது கட்சி தனித்தே போட்டியிடும் என அதன் பொதுச் செயலர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். கொள்கை அடிப்படையிலேயே வடமாகாண சபையின் தேர்தலை தாங்கள் புறக்கணித்ததாக கஜேந்திரன் கூறுகிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி கட்சிகள் இன்னாள் மற்றும் முன்னாள் அரசில் பங்காளிகளாக இருந்த காரணத்தால் அப்படியான கட்சிகளுடன் தாங்கள் கூட்டணி வைக்கவிரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் பிரதேசம், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வு, வாழ்வாதார மேம்பாடுகள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி போட்டியிடும் எனவும் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.