Breaking News

வலி.வடக்கில் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க முடிவு

வலி.வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தினர் வசம் உள்ள 700 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.

தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் மற்றும் அதனை அண்டிய கிராமங்களிலும், வளலாய், பலாலி கிழக்கு ஆகிய கிராமங்களிலும், உள்ள 700 ஏக்கர் காணிகளே உரியவர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

நேற்று முன்தினம் கொழும்பில் ஜனாதிபதியின் செயலரின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், இது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று குறிப்பிட்ட பகுதிகளுக்குச் சென்ற யாழ். மாவட்ட அரச செயலக அதிகாரிகள் குழுவொன்று அந்தப் பகுதிகளைப் பார்வையிட்டுத் திரும்பியுள்ளது.

போருக்கு முன்னர், இந்தப் பிரதேசங்களில் 300 குடும்பங்கள் வசித்து வந்தன. தற்போது விடுவிக்கப்படவுள்ள காணிகளின் எல்லைகள் முற்றாகவே அழிந்து போயுள்ளன. இதனால், காணிகளை அளவை செய்து எல்லைகளை நிர்ணயிக்க வேண்டியுள்ளது.

அந்தப் பிரதேசத்தில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் தமது காணிகளின் எல்லைகளை அடையாளம் காட்டவும், வரும் தைப்பொங்கலுக்கு முன்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்த சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்களை மீள் குடியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.