Breaking News

மாட்டுப் பொங்கல் அன்று என்ன பூஜை செய்ய வேண்டும்? யாரை வழிபட வேண்டும்?

 


மாட்டுப் பொங்கல் கிராமங்களில் மிகப் பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. பல ஆலயங்களில் இந்த நாளில் கோ பூஜை நடத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. மாட்டுப் பொங்கல் நாளில் நடக்கும் கோ பூஜைகளில் கலந்து கொள்வது மகாலட்சுமியின் அருளை பெற்றுத் தரும்.

பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. தைப் பொங்கல் நாளில் பொங்கல் வைத்து சூரிய பகவான் உள்ளிட்ட இயற்கைக்கு நன்றி தெரிவிக்கிறோம். அதே போல் உழவுத் தொழிலுக்கு விவசாயிகளுக்கு பெரிதும் துணையாக இருக்கும் மாட்டிற்கு நன்றி தெரிவிக்கும் நாளாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மாடு வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி அனைவரும் இந்த நாளில் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்து மத கொள்கைகளின் படி மாடு தெய்வத்திற்கு இணையாக வணங்கப்படுகிறது. இந்த மாட்டினை வருடத்திற்கு ஒரு நாள் சிறப்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே பொங்கல் திருநாளோடு சேர்த்து மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.

​மாட்டு பொங்கல் கொண்டாடும் முறை :

மாடு வைத்திருப்பவர்கள் மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை குளிக்க வைத்து, குங்கும பொட்டு வைத்து, சலங்கை கட்டி, அதன் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரிப்பார்கள். மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து, கோலமிட்டு, சாம்பிராணி காட்டுவார்கள். மாட்டுத் தொழுவத்தில் பொங்கல் வைத்து, அந்த பொங்கலை மாட்டிற்கு ஊட்டி, மாட்டு பொங்கலை கொண்டாடுவார்கள்.

மாடு இல்லாதவர்கள் எப்படி கொண்டாடுவது?

மாடு இல்லாதவர்கள் இந்த நாளில் முன்னோர்களை வழிபட வேண்டும். மாட்டுப் பொங்கல் அன்று சிலர் அசைவம் சமைத்து முன்னோர்களுக்கு படையல் இடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் பெரும்பாலானவர்கள் வடை, பாயசம் ஆகியவற்றுடன் நமது முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகளையும் சமைத்து படைப்பார்கள். சைவம் உணவுகளை படையல் வைப்பவர்கள் சுவாமி படத்திற்கு முன்பாகவோ அல்லது முன்னோர்கள் படத்திற்கு முன்பாகவோ வைப்பார்கள். அசைவம் வைப்பவர்கள் நடுவீட்டில் வைக்கும் பழக்கம் உள்ளது.

மூன்று இலைகளில் படையல் இட்டு, அவற்றுடன் வேட்டி, துண்டு, புடவை ஆகியவற்றையும் வைத்து படைத்து வழிபட வேண்டும். நமது முன்னோர்கள் நற்கதி அடைய வேண்டும் என வழிபட்டு, அவர்களின் ஆசியையும், கடவுளின் ஆசியையும் பெற வேண்டும். படையலில் வைத்து ஆடைகளை வீட்டில் உள்ள பெரியவர்கள் உடுத்திக் கொள்ளலாம். அல்லது யாருக்காவது தானமாக கொடுக்கலாம்.

யாரை வழிபட வேண்டும் :

மாட்டுப் பொங்கல் அன்று காமதேனுவையும், நந்தி தேவரையும் வழிபட வேண்டும். அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று நந்தி தேவரை வழிடலாம். காமதேனு இருந்தால் காமதேனுவை வழிபடலாம். அல்லது பசு மடம் இருந்தால் அங்கு சென்று பசுக்களை வழிபட்டு, உணவளிக்கலாம். மாட்டுப் பொங்கல் அன்று கோ பூஜை செய்வது மிக சிறப்பானது. காகம், நாய்கள், மாடுகள் போன்றவற்றிற்கு உணவளிக்கலாம்.

​மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் :

2023 ம் ஆண்டு மாட்டுப் பொங்கலானது ஜனவரி 16 ம் தேதி திங்கள் கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிவரை பொங்கல் வைத்து வழிபடலாம். முடியாதவர்கள் மாலையில் 04.30 மணி முதல் 05.30 வரை பொங்கல் வைக்கலாம்.