Breaking News

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 35

இரு டாங்கிகள் நெருப்பைக் கக்கியவாறு முன்னால் வர அதன் பின்னால் படையினர்
முன்னேறிக்கொண்டிருந்தனர். பரா வெளிச்சம் அணைந்த அடுத்த சில நிமிட இடைவெளியின் சாதுரியனும் இன்னொரு போராளியும் ஆர்.பி.ஜியுடன் ஓடிப்போய் ஒரு இடிந்த சுவர் மறைவில் நின்று கொண்டனர். மீண்டும் பரா வெளிச்சம் பரவிய போது சாதுரியனின் ஆர்.பி.ஜி இலக்குத் தவறாமல் டாங்கியின் சுடுகுழலை சிதறடித்தது. பெண் போராளி வேதாவின் ஆர்.பி.ஜி. மற்ற டாங்கியின் செயினை அறுத்தது. இரு டாங்கிகளும் செயலிழந்து விடவே போராளிகளின் தாக்குதல் உக்கிரமடைந்தது. 

பின்பக்கமிருந்து வந்த ஆட்டிலறி தாக்குதலும் படையினரை நிலைகுலைய வைத்தன. இரவு 9.00மணியளவில் படையினர் பெரும் இழப்புக்களுடன் தங்கள் நிலைகளுக்குப் பின்வாங்கத் தொடங்கினர். அன்றைய சண்டை அத்துடன் ஓய்வுக்கு வந்துவிட்டது. இரவு பதினொரு மணியளவில் கீரிசுட்டான் உடைக்கப்பட்டு விட்டதாகவும் போராளிகள் சுற்றிவளைக்கப்படும் அபாயம் இருப்பதாக உடனடியாக பெரியமடுவுக்கு பின்வாங்கும்படி கட்டளை பீடத்திலிருந்து உத்தரவு வந்தது. சிவத்தால் ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை. இவ்வளவு நாட்களாக எத்தனையோ போராளிகளைப் பலிகொடுத்துக் காத்த எல்லையை கைவிடுவது சகிக்க முடியாத துயரமாகவே அவனுக்குத் தோன்றியது.

ஆனால் என்ன செய்யிறது?, கட்டளைக்குக் கீழ்படியத்தானே வேண்டும். இடத்தை இழந்தாலும் பலத்தைத் தக்க வைத்தால் மீண்டும் இடத்தைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்துடன் பின்னகரும் ஏற்பாடுதனைக் கவனிக்க ஆரம்பித்தான். பெரியமடுவில் வெகு நேர்த்தியான முறையில் தேக்கம் குற்றிகளாலும் மண் மூடைகளாலும் காவல் நிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு சென்ற பிறகு தான், பரப்புக்கடந்தானிலிருந்து போராளிகள் பின்வாங்கி விட்ட விஷயத்தை அறிந்துகொண்டான். இப்போ காவல் வரிசை பெரியமடு, ஈச்சிலவத்தை, ஆலங்குளம், அடம்பன், சிறுநாவற்குளம், பாப்பா மோட்டை என நீண்டிருந்தது.

காவல் நிலைகள் பற்றைகள் போன்றும், வைக்கோல் போர்கள் போன்றும் நன்றாகவே உருமறைப்புச் செய்யப்பட்டிருந்தன. பெரியமடு வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் கீதாவும் பதினெட்டுப் பெண் போராளிகளும் படையினரின் சுற்றிவளைப்புள் அகப்பட்டு வீரச்சாவடைந்துவிட்டதாகச் செய்தி வந்தது. கீதாவின் இழப்பு சிவத்தை உலுப்பியே விட்டது. அவள் ஒரு சிறந்தபோராளி மட்டுமன்றி, அணியை வழிநடத்துவதில் தனித்துவமான ஆற்றல் மிக்கவள். அவள் நல்ல அழகியும் கூட. அவளின் நீண்ட கருங்கூந்தலைக் கண்டு பல பெண் போராளிகள் பொறாமைப்படுவதுண்டு. அவளின் வித்துடல் படையினரிடம் அகப்பட்டால் உயிரற்ற அவளின் உடலைக் கூட சிதைக்காமல் விடமாட்டார்கள்.

அந்தப் பத்தொன்பது பெண் போராளிகளினதும் உடல்கள் மீட்கப்படவில்லை என்பதைக் கேள்விப்பட்ட போது அவனின் நெஞ்சு நடுங்கியது. முன்பு மணலாற்றில் ஐந்து முகாம்கள் மீதான தாக்குதலின் போது படையினர் தங்களிடம் அகப்பட்ட பெண் போராளிகளின் உயிரற்ற உடல்களின் கழுத்தை வெட்டியும், மார்பகங்களை அறுத்தும், பெண்ணுறுப்பைச் சிதைத்தும் பொலித்தீன் பைகளில் போட்டு அனுப்பியமை அவனின் நினைவுக்கு வந்தது. கீதாவின் அழகிய உடலுக்கும் அப்படி ஒரு கதி ஏற்பட்டுவிடுமோ என அவன் அஞ்சினான். மாபெரும் தரையிறக்கத்தின் போது இருபக்கமும் படையினர் தாக்குதல் தொடுக்க நடுவே நின்று போராளிகள் போராடிய போது அவள் நடத்திய வீர சாகசங்கள் அவன் நினைவில் வந்து போயின.

அவள் நிலத்தடி பங்கரில் நின்று போராடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரியின் டாங்கி ஒன்று நெருங்கிவிட்டது. அவளை நசுக்கும் நோக்கில் டாங்கி பங்கர் மேலால் நகர்ந்தது. சாதுரியமாக செயினுக்குள் அகப்படாமல் தடுப்பதற்கு உருண்ட அவள் அதன் பின் பக்கத்தால் பாய்ந்து ஏறி, கைக்குண்டைக் கழற்றி மேல் கதவால் போட்டுவிட்டாள். டாங்கிக்குள்ளிருந்த நான்கு படையினரும் உடல் சிதறி இறந்துவிட்டனர். அவளைப் போன்ற துணிவும் வீரமும் கொண்ட போராளிகளின் இழப்பு என்பது பேரிழப்பாகும் என்றே சிவம் கருதினான். ஒரு பெருமூச்சுடன் அவன் அடுத்த பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தான்.

அன்று இரவு சுந்தரத்துக்கு தூக்கம் வர மறுத்துவிட்டது. இலுப்பைக்கடவை மருத்துவமனையில் எறிகணை வீச்சிலும், விமானத் தாக்குதலிலும் படுகாயமடைந்த பலர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மக்கள் உயிரைப் பாதுகாக்க ஊர்விட்டு ஓடினாலும் கூடப் படையினர், அவர்களைக் கொல்வதிலும் காயப்படுத்துவதிலும் குறியாகவே இருந்தனர். அவர்களின் மக்கள் மீதான கொலைவெறி முதியவர்கள், சிறுவர், சிறுமியரைக் கூட விட்டுவைக்கவில்லை.

முதல் நாள் மாலையே கொண்டுவந்த தகரங்களையும் தடிகளையும் பாவித்து ஒரு கொட்டில் அமைத்துக் கொண்டனர். பெருமாளின் கூடாரத்தையும் தடியை விட்டு இழுத்துக் கட்டி விட்டனர். சுந்தரம் வெளியே மணலிலேயே படுத்துவிட்டான். நீண்ட நேரத்தின் பின்பே அவனால் தூங்க முடிந்தது. மறுநாள் காலை விழித்தெழுந்த போது வானம் மஞ்சள் வர்ணம் பூச ஆரம்பித்துவிட்டது.

முத்தையர் எல்லோருக்கும் தேனீர் தயாரித்து கொடுத்தார். முத்தம்மா ஒரு தேனீர் குவளையை வாங்கிக் கொண்டு போய் சுந்தரத்திடம் நீட்டினாள். அவனும் எதுவுமே பேசாமலே வாங்கிக் குடிக்க ஆரம்பித்தான். முருகரப்பு பரமசிவத்திடம் கேட்டார், “இனி என்ன செய்யிறதாய் உத்தேசம்?” பரமசிவம் சில விநாடிகள் யோசித்துவிட்டு, “அந்தக் கரையிலை ஒரு நல்ல இடமாய்ப் பாத்து மரக்கறியெண்டாலும் போடோணும்”, என்றார்.

“மரக்கறி காய்க்கத் தொடங்கு முன்பே இஞ்சையிருந்தும் வெளிக்கிடுற நிலைமை ஏற்பட்டால்..” “அப்பிடி நடக்குமெண்டு நினைக்கிறியே?” எனக் கேட்டார் பரமசிவம். “சண்டையிலை உதுகளெல்லாம் சொல்லிக் கொண்டே” பரமசிவம் ஆமோதித்தார். “உண்மை தான்.. ஆனால் அதுக்காகச் சும்மா இருக்க ஏலுமே?.. வயித்துப் பாட்டுக்கு ஏதும் பாக்கத்தானே வேணும்” முருகரப்பு சிறிது நேரம் எதையோ ஆழமாக யோசித்துவிட்டு, “எனக்கு முழங்காவிலில வேலுப்பிள்ளையெண்டு சிநேகிதன் இருக்கிறான்.

நல்ல செம்பாட்டு மண் காணி, தண்ணியும் நல்ல தண்ணி. அங்கை போனமெண்டால் வடிவாய்த் தோட்டம் செய்யலாம்”, எனக் கூறினார். பரமசிவத்துக்கும் அது நல்ல யோசனை போலவே பட்டது. “அப்பிடி ஒரு வசதி இருக்குமெண்டால் போறது நல்லது தானே!” என்றார் பரமசிவம். எல்லோரும் கூடி ஆலோசித்த பின்பு அடுத்த நாள் அதிகாலையில் புறப்படுவதாக முடிவெடுத்தனர். அடம்பன், பாப்பாமோட்டை, ஆலங்குளம் பகுதிகளைப் போராளிகள் மிக முக்கிய மையமாகவே கருதினர்.

தள்ளாடி இராணுவம் அந்த முனைகளால் உடைக்குமாக இருந்தால் போராளிகள் மிக நீண்ட தூரம் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். அது மட்டுமன்றி இடம்பெறும் சண்டையின் பிரதான விநியோக மையமாகவும் தள்ளாடியே விளங்கியது. மேலும் ஒரு பெரும் வாகனத் தொடரணி ஆயுதங்களுடனும், வெடி பொருட்களுடனும் வந்திருப்பதாகவும் ‘வேவுத்’ தகவல்கள் கிடைத்தன.

எனவே தள்ளாடி முகாமின் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் வகையில் ஒரு தாக்குதல் மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுக்கப்பட்டு இரு கரும்புலி அணிகள் மூலம் வாகனத் தொடரணியையும், ஆட்டிலறித் தளத்தையும் தகர்ப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

செங்குட்டுவனும் கிரியும் தள்ளாடிக்குள் புகுந்து வாகனத் தொடரணியைத் தாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் ஜான்சியும், மேகாவும் ஆட்டிலறித் தளத்தை இலக்கு வைப்பது எனவும் திட்டமிடப்பட்டது. மாலை மங்கிக் கொண்டிருந்த அவ் வேளையில் செங்குட்டுவனையும், கிரியையும் கடற்புலிகள் கொண்டு சென்று மாந்தையின் திருக்கேதீஸ்வரத்தின் பின்புறமாக இறக்கிவிட்டனர்.

தாங்கள் அணிந்திருந்த மீனவர்களின் உடையைக் கழற்றிவிட்டுப் பைகளில் கொண்டு வந்த இராணுவச் சீருடைகளை அணிந்து கொண்டனர். கொண்டுவந்த பையை வள்ளத்தில் கொடுத்துவிட்டு விடத்தல் மரங்களும், விளாத்திகளும் நிறைந்த அந்தக் காட்டினூடாக நடக்கத் தொடங்கினர். அவர்கள் பாலாவியாற்றைக் கடந்து மன்னார் பூநகரி வீதியில் ஏற வேண்டும். அடிக்கடி சுழலும் ‘வவோக்கஸ்’ வெளிச்சம் பட்டுவிடாமல் வெகு அவதானமாக நகரவேண்டியிருந்தது.

பாலாவியைக் கடக்கும் போது மிகவும் எச்சரிக்கையுடன் நடக்கவேண்டியிருந்தது. படையினர் நீருக்குள்ளும் முட்கம்பிச் சுருள்களைப் போட்டு வைத்திருக்கக் கூடும் வெளிச்சம் வரும் போது நீருக்குள் அமிழ்ந்தும் மற்ற நேரங்களில் எழுந்தும் பாலாவியைக் கடந்தனர். இரட்டை வேலிப் பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது. நெஞ்சால் ஊர்ந்து சென்று முதல் வேலிக் கம்பிச் சுருள்களை வெட்டினர்.

இரு வேலிகளுக்குமிடையே ரோந்து இடம்பெறுமாதலால் ரோந்து அணி வந்து போகும் வரை நல்ல மறைவான இடத்தில் காத்திருந்தனர். அவர்கள் போன பின்பு இருவரும் உட்புகுந்தனர். அடுத்த இரண்டாவது வேலி முட்கம்பிச் சுருளையும் வெட்டி உள்ளே போனார்கள்.

பின்பு கிரி ஒரு பள்ளத்தில் இறங்கி காப்புச் சூடு கொடுக்கத் தயாரானான். உள்ளே மெல்ல கட்டிட நிழல்கள் ஊடாக நடந்து கொண்டிருந்த செங்குட்டுவன் ஒரு படையினன் வருவதைக் கண்டுவிட்டான். மறைப்பிடமில்லாத நிலையில் அவனை நோக்கி இராணுவ நடையில் போக ஆரம்பித்தான். சாதாரணமாக அவனைக் கடந்து சென்ற படையினர் திடீரென நின்றான். அவனுக்கு ஏதோ சந்தேகம் வந்திருக்கவேண்டும். அவன் கேட்டான்..“கௌத?” “மங்.. பியஸ்ரீ.. மச்சாங்..” என்றவாறே செங்குட்டுவன் அவனை நெருங்கினான்.

அவன் சந்தேகத்துடன், “பியஸ்ரீத..” எனக் கேட்டான். செங்குட்டுவன் தாமதிக்கவில்லை. கைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை தொண்டைக்குழியில் ஏற்றிவிட்டுப் பக்கவாட்டில் இழுத்தான். எவ்வித சத்தமுமின்றி படையினன் சுருண்டு விழுந்தான். அவனை இழுத்து ஒரு நிழலில் தள்ளிவிட்டு, வாகனத் தொடரணி அருகில் போனான் செங்குட்டுவன். பொருத்தமான இடத்தில் ‘பிக்ஸ்’ அடித்துவிட்டு வேலியை நோக்கி வர எங்கோ நின்ற ஒரு படையினன் கண்டுவிட், “கொட்டியா, கொட்டியா”, எனச் சத்தமிட ஆரம்பித்தான்.

பல படையினர் ஓடிவரக் கிடங்கில் இருந்த கிரி அவர்களை நோக்கிச் சுட ஆரம்பித்துவிட்டான். செங்குட்டுவனைத் தொடர முடியாமல் கிரி தடுத்துச்சுட்டுக் கொண்டிருந்தான். செங்குட்டுவன் வெளியே வந்து பாலாவியைக் கடந்த பின்பு உள்ளே பெரும் வெடியோசை கேட்டது. கிரி சார்ஜரை இழுத்துவிட்டான் என்பதை செங்குட்டுவன் புரிந்து கொண்டான். செங்குட்டுவன் வோக்கியை எடுத்து விஷயம் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டதை கட்டளைப் பீடத்திற்கு அறிவித்தான். ஜான்சியும் மேகாவும் அடம்பனுக்கும் சிறுநாவற்குளத்துக்குமிடையே ஊடுருவி திருக்கேதீஷ்வரம் சந்தியிலிருந்து வரும் தள்ளாடி முகாம் வீதிக்கு வந்தனர்.

அது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியாதலால் தூரம் தூரமாகவே இராணுவக் காவலரண்கள் அமைந்திருந்தன. வேலியை வெட்டி உள்ளே புகுந்த அவர்கள் ஆட்லறி தளத்தில் ‘பிக்ஸ்’ அடித்துவிட்டு வெளியேறிவிட்டனர். அவர்கள் அதிஷ்டவசமாக எவ்வித சிக்கலுமின்றி வேலையை நிறைவேற்றிவிட்டனர். சரியாக இரண்டு மணிக்கு வாகனத் தொடரணி மீது அடுத்தடுத்து மூன்று எறிகணைகள் விழுந்தன. அவை வெடித்துச் சிதற ஆரம்பித்தன. விடிந்த பிறகும் கூட தள்ளாடி முகாமுக்குள் வெடியோசைகள் கேட்டுக்கொண்டிருந்தன.

வேறு இரு எறிகணைகள் ஆட்லறித்தளத்தின் மீது விழுந்து அதை முற்றாகவே நிர்மூலமாக்கின. பின்பு இராணுவ முகாமில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கிரியின் சிதைந்த உடலை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

-தமிழ்லீடருக்கு அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 01
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 02
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 03
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 04
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 05
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 06
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 07
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 08
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 09
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 10
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 11
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 12
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 13
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 14
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 15
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 16
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 17
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 18
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 19
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 20
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 21
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 22
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 23
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 24