ஒபாமா, கமரூன் போன்று விமான வசதிகளை அனுபவிக்க முயன்ற மஹிந்த
சர்வதேச நாடுகளின் பிரபல தலைவர்களான பராக் ஒபாமா, சுல்தான் இளவரசர் மற்றும் டேவிட் கமரூன் ஆகியோரைப் போன்று விமானங்களில் நட்சத்திர அறைகளை ஸ்தாபிக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 4 பில்லியன் அமெரிக்க டொலரை செலவிடுவதற்காக எயார் லங்காவுடன் ஒப்பந்தம் செய்திருந்ததாக சமூக நலன்புரிகள் இராஜங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சுமத்தினார்.
எயார் லங்கா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ள போதும் குறித்த நிறுவனத்திற்கு அரசாங்கம் 1.4 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இராஜங்க அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
பிரபல சர்வதேச தலைவர்களான பராக் ஒபாமா, சுல்தான் இளவரசர் மற்றும் டேவிட் கமரூன் ஆகியவர்களின் விமான அறைகளை போன்று தான் பயணிக்கும் விமான அறைகளை புதுபிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எயார் லங்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். இதனூடாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிட திட்டமிடப்பட்டிருந்தது.
தற்போது எயார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ள போதிலும் குறித்த நிறுவனத்திற்கு அரசாங்கம் 1.4 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த வேண்டியுள்ளது.
நாட்டு மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் சூழலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய வெளிநாட்டு பயணம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியே சிந்தித்துள்ளார். இதற்காக பல கோடிக்கணக்கான மக்களின் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. மக்கள் மூவேளை சாப்பிட முடியாமல் இருக்கும் தருவாயில் மஹிந்த ராஜபக்ஷ உலகின் பிரபலங்களை போன்று வாழ்வதற்கு முனைந்துள்ளார்.
இதன்படி விமானத்தில் நட்சத்திர அறைகளை ஸ்தாபிப்பதற்கு 4 அமெரிக்க டொலர் பில்லியன் கணக்கில் எயார் லங்கா சேவையுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இவை அனைத்தும் மக்களுடைய பணமாகும். இவ்வாறு மக்களின் பணத்தின் மீது ஆசை கொண்டதன் பயனாகவே தற்போது சிறைச்சாலை மற்றும் நீதிமன்ற வளாகங்கள் மீது காலடி எடுத்து வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை ராஜபக்ஷ குடும்பத்தினரையும் அவருக்கு சார்பாக செயற்படுபவர்களையும் கைது செய்யாமல் இருப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் டீல் செய்திருப்பதாக குற்றம் சுமத்தியிருந்தனர். எனினும் தற்போது யோசித்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். அதுமாத்திரமின்றி வரலாற்றில் முதற்தடவையாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பிரபல அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.
அதுமாத்திரமின்றி நேற்றைய தினம் மஹிந்தானந்த அளுத்கமகே தொடர்பாகவும் விசாரணை செய்யப்பட்டது. இதன்படி பசில் ராஜபக்ஷ, சஜின் வாஸ் குணவர்தன, சரண குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர். எனவே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டே தீருவார்கள். குற்றவாளிகளை தப்பிக்க விட வேண்டிய தேவை எமக்கு கிடையாது என்றார்.