Breaking News

தலைவர் பிறந்த நாள் ; தமிழர் நிமிர்ந்த நாள் - சீமான் கவிதை.!

தமிழ்த்தேசிய தலைவர் எனவும், உலகினுக்கு தமிழர் தம் வீரத்தையும், போராட்ட குணத்தையும் எடுத்துக்காட்டியவர் எனவும் தமிழ்த்தேசிய சக்தி களால் கொண்டாடப்படுகின்ற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 64வது பிறந்த நாள் விழா உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப் பட்டு வருகிறது.

தமிழகத்திலும் ஈழ ஆதரவு சக்திகள் என அறியப்படுகிற பழ. நெடுமாறன், வைகோ, திருமா, வேல்முருகன், திருமுருகன் காந்தி, கொளத்தூர் மணி, இயக்குனர் கௌதமன் உள்ளிட்டோர் புலிகள் இயக்க தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம், மருத் துவ முகாம்கள் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இன்று மாலை தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் சென்னை, வேப்பேரியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பில் நடைபெற உள்ளது. நிகழ்வில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்க உள்ளார்.

முன்னதாக, புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு சீமான் தனது முகநூல் பக்கத்தில் கவிதையொன் றினை பதிவிட்டுள்ளார்.



தலைவர் பிறந்தநாள்!
 தமிழர் நிமிர்ந்த நாள்!
மொழியாய்! விழியாய்!
வழியாய்! எங்கள் உயிராய்!
உணர்வாய்! அறிவாய்!
ஆற்றலாய்! மானமாய்!
வீரமாய்! எங்கள் முகமாய்!
முகவரியாய்!
 பெருமைமிகு அடையாளமாய்!
பெரும்வீர வரலாறாய்
இருப்பவன் இவன்!
சுதந்திரக் காற்று! சுடரொளிக் கீற்று! 
புரட்சியின் பெரும் வெடிப்பு!
தமிழ்த்தேசிய இனத்தின்
உயிர் துடிப்பு!
ஆண்டுப் பலவாய் அன்னைத்
தமிழ் அருந்தவமிருந்து பெற்ற மகன்!
 புறநானூற்று வீரம் படைத்த மறவன்!
மண்ணின் மானம் காக்க
வீரர் படை நடத்தியவன் இவன்!
 அடிமை வாழ்விலும் உரிமைச்சாவு
உயர்ந்ததென்று உணர்த்தியவன்!
இவன் எங்கள் தலைவன்!
 எங்களின் அன்புமிகு அண்ணன்!
 எங்களின் ஆண் தாய்!
 தலைவன் பிறந்தான்!
தமிழன் நிமிர்ந்தான்!
எம் தலைவரின் பிறப்பு!
தமிழினச் சிறப்பு!
நிறைந்த அன்புகொண்டு
நெஞ்சார வாழ்த்துகிறோம்!
வாழ்க! வாழ்க! எம் இறையே!
வாழ்க! வாழ்க!
நீ நிறைய!
                             பிறந்த நாள் வாழ்த்துகள்!