Breaking News

கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் 7000 பக்தர்கள் பங்கேற்பு

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா இன்று நடைபெறும் நிலையில், இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும், 7000இற்கும் அதிகமான பக்தர்கள், நேற்றிரவு கச்சதீவை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் நேற்றிரவை கச்சதீவில் கழித்ததுடன், இன்று காலை நடைபெறும், அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்கின்றனர்.நேற்று நண்பகல் தொடக்கம் கச்சதீவுக்கு பக்தர்கள் வரத் தொடங்கியிருந்தனர். நேற்றிரவு வரை 300 கத்தோலிக்க மதகுருக்களும், சுமார் 7000 பக்கதர்களும் கச்சதீவை வந்தடைந்தனர்.

தமிழ்நாட்டில் இருந்து 92 படகுகளில், 3800 பக்ததர்கள் கச்சதீவு வந்தனர். அதேவேளை, மன்னாரில் இருந்தும், யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் இருந்தும் கச்சதீவுக்கு பக்தர்கள் வந்துள்ளனர்.இதற்காக தலைமன்னார், குறிகாட்டுவான், நெடுந்தீவு இறக்குதுறைகளி்ல் இருந்து படகுச் சேவைகள் நடத்தப்பட்டுள்ளன.

நேற்று மாலை கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தில் கொடிஏற்றப்பட்டு திருவிழா ஆரம்பமானது. இன்று காலை யாழ். ஆயர் வண. ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் திருப்பலியுடன் திருவிழா நிறைவடையும்.