Breaking News

150ஆவது பட்டத்தை பூர்த்தி செய்யும் சாதனைத் தமிழன்(காணொளி)


”பாமரனுக்கும் இருபத்திநாலு மணி நேரம்தான்,
பாரதப் பிரதமருக்கும் இருபத்திநாலு மணி நேரம்தான், நேரத்தை நாம எப்படி பயன்படுத்திக்கிறோம்கிறதைப் பொறுத்துதான் எல்லாமே. என்னோட முதல் டிகிரி பி.காம், சமீபத்துல வாங்கின டிகிரி எம்.எம்.எஸ் (மாஸ்டர் ஆஃப் மேனேஜ்மென்ட் சயின்ஸ்) மூணு நாளைக்கு முன்னால எம்.சி.டபுள்யூவுக்கு பரீட்சை எழுதிட்டு வந்திருக்கேன். இந்த பேட்டி வெளிவர்றதுக்குள்ள இன்னொரு டிகிரி என் கைக்கு வந்தாலும் வரலாம்'' படிப்பு படிப்பு என வார்த்தைக்கு வார்த்தை டிகிரி சேர்த்துப் பேசுகிறார் வி.என்.பார்த்திபன். நூற்று நாற்பதுக்கும் அதிகமான டிகிரி முடித்திருக்கும் மனிதர்  பற்றி ஏற்கனவே தமிழ்கிங்டொத்தில் எழுதியிருந்தோம்.

எப்படி படிப்பு மேல இவ்வளவு ஆர்வம் வந்துச்சு?

''வயசு அம்பத்தி அஞ்சு ஆச்சுங்க. சொந்த ஊரு செய்யூர். இப்போ மைலாப்பூர் விவேகானந்தா காலேஜ்ல காமர்ஸ் டிபார்ட்மென்ட்ல துறைத்தலைவரா இருக்கேன். எல்லோரும் கேட்பாங்க, எப்போ பாரு படிப்பு படிப்புன்னு இருக்கியேன்னு. நான் என்னோட சப்ஜெக்ட்டை லவ் பண்றேங்க, அதனால எனக்கு அதைத்தவிர வேற எதுவுமே தோணுனது இல்லை. இதுவரை நான் படிச்ச எல்லா படிப்புமே நானே சம்பாதிச்சுப் படிச்சது, சின்ன வயசுல வாட்ச்மேன் வேலை பார்த்து கிடைச்ச அஞ்சு ரூபாய் சம்பளத்துல படிச்சேன், இப்போ ப்ரொஃபசரா நல்ல நிலைமையில் இருக்கேன். இதுதான் வித்தியாசம்.''


படிப்பைத் தவிர வேறு எதில் ஆர்வம்?

''கங்கையில குளிக்கும்போது காவிரியைப் பற்றி எதுக்கு நினைக்கணும்? எனக்கு விருப்பம் எல்லாம் புது புது சப்ஜெக்ட்தான். அதனால வேற எதையும் யோசிக்கக்கூட விருப்பம் இல்லை. சினிமா பார்க்கிறது கிடையாது, இதுவரை கல்யாணம் காதுகுத்துனு எந்த விழாவுக்கும் போனது கிடையாது, சொன்னா நம்புவீங்களா? என் வாழ்க்கையில இதுவரை நான் ரெண்டே ரெண்டு கல்யாணத்தைதான் பார்த்திருக்கேன். ஒண்ணு என்னோட கல்யாணம், இன்னொன்னு என் தங்கச்சி கல்யாணம்.
என் அக்கா கல்யாணத்தன்னிக்கிக்கூட ஒரு எக்ஸாம் எழுதப் போயிட்டேன், அப்பா இறந்த அன்னிக்கு ஒரு பரீட்சை எழுதப் போயிட்டேன், என் கல்யாணத்துல காலையில தாலிகட்டி முடிச்சுட்டு மதியம் ஆபீஸுக்குப் போயிட்டேன், கூட வேலை பார்த்தவங்க, லீவு போட்டு ஹனிமூன் போகலையான்னு கேட்டாங்க, அந்த லீவை வேறு ஏதாவது பரீட்சைக்கு படிப்பு சம்பந்தமாகப் பயன்படுத்திக்கலாம்னு சொல்லி முடிச்சுட்டேன், இதான் சார் நான்.''

இந்தத் தலைமுறை, எக்ஸாம் எல்லாம் ஒரு கசப்பு மருந்து மாதிரி பார்க்கிறாங்களே?

''ஆமா. இங்கே படிப்பை யாரும் திணிச்சுப் படிக்க வைக்க முடியாது, அவங்களுக்கே அந்த ஆர்வம் வரணும். எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு... ரெண்டு பேருமே ஆளுக்கு ரெண்டு டிகிரியோட படிச்சது போதும்னு வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் என்னோட வாழ்க்கையை அனுபவிச்சு வாழ்றேன். வீட்டுல டி,வி எப்படி ஆபரேட் பண்ணணும்னு தெரியாது, மனைவி நியூஸ் சேனல் வெச்சாங்கன்னா நியூஸ் கேட்பேன். வீட்டுல யாரும் இல்லைன்னா ஏதாச்சும் புக் படிக்கலாம்னுதான் தோணும். என்னோட போன்ல போன் பண்ற பட்டன், கால் கட் பண்ற பட்டன், இது ரெண்டைத் தவிர வேற எதுவும் எனக்குத் தெரியாது.''

எந்த சப்ஜெக்ட் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சது?

''ஒரு அம்மாகிட்ட உங்களோட குழந்தைங்கள்ல எந்தக் குழந்தை உங்களுக்குப் பிடிக்கும்னு கேட்கிற மாதிரிதான் இந்தக் கேள்வி. என்னோட முதல் டிகிரி பி.காம் பச்சையப்பாஸ்ல படிச்சேன், அடுத்த வாரம் மூணு எக்ஸாம் இருக்கு. எனக்கு எல்லா சப்ஜெக்டுமே பிடிக்கும், இருந்தாலும் சட்டப்படிப்பு மேல ஒரு இனம் புரியாத காதலும் உண்டு.''

உங்களுக்கு ரோல்மாடல்?

''என்னோட மனைவிதான். அவங்க பேரு செல்வகுமாரி. வங்கி அதிகாரியா இருக்காங்க, ரொம்பப் பொறுமைசாலி. என்னை என் இஷ்டத்துக்கு வேலை பார்க்க விட்டுட்டு என்னோட பொறுப்புகளையும் சேர்த்து அவங்களே பார்த்துக்கிறாங்க.''

இதனால நீங்க அடைஞ்சது என்ன? இழந்தது என்ன?

''இந்தப் படிப்பு மூலமா இழந்தோம் அப்படின்னு நான் என்னைக்கும் நினைச்சது கிடையாது, ஆனா சிலர் கேட்பாங்க, ஒரு டிகிரி முடிச்சவங்களும் அதே சம்பளம்தான் வாங்குறாங்க, இவ்ளோ டிகிரி முடிச்ச நீயும் அதே சம்பளம்தான் வாக்குறேன்னு. யாராச்சும் இப்படி பேசும்போது மட்டும் இவ்வளவு படிச்சும் சரியான அங்கீகாரம் கிடைக்கலையேன்னு வருத்தம் மட்டும் இருக்கும். இந்த வருஷத்துல 150-வது டிகிரி முடிச்சுட்டு கின்னஸ் ரெக்கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்னு இருக்கேன், அநேகமா இன்னும் மூணு மாசத்துல 150-வது டிகிரி முடிச்சுருவேன்னு நினைக்கிறேன்.''

தெய்வம் சார் நீங்க!

மேலும் சாதனையாளர்களை தெரிந்துகொள்ள

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்