சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசர் பிரியசாத் டெப்?
சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப்பை நியமிக்குமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, அரசியலமைப்பு சபை பரிந்துரை செய்துள்ளது.
புதிய தலைமை நீதியரசரைப் பரிந்துரைப்பதற்காக, அரசியலமைப்பு சபை நேற்றிரவு அவசரமாக கூடி ஆராய்ந்தது.
இந்தக் கூட்டத்தின் பின்னரே, தற்போது, மூப்பு வரிசையில் முதலிடத்தில் உள்ள பிரியசாத் டெப்பை புதிய தலைமை நீதியரசராக நியமிக்குமாறு சிறிலங்கா அதிபருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சபையின் கூட்டத்தில் நீதியரசர் கே.ரி.சித்ரசிறியின் பெயரும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மாற்றுப் பெயராக இவர் சிறிலங்கா அதிபரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் புதிய தலைமை நீதியரசரை நியமிப்பார். பெரும்பாலும், புதிய தலைமை நீதியரசராக பிரியசாத் டெப் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்காவின் தலைமை நீதியரசர் சிறிபவன் இன்றுடன் ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.