Breaking News

மன்னார் கடற்படுக்கையில் 60 ஆண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம்

மன்னார் கடற்படுக்கையில், 5 பில்லியன் பரல் எண்ணெயும், 9 ரில்லியன் சதுர அடி இயற்கை எரிவாயுவும் இருப்பதாக, பொது கணக்குக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.


பொது கணக்குக் குழுவின் அறிக்கையை அவர், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

‘இந்த எண்ணெய், இயற்கை எரிவாயு வளத்தைக் கொண்டு சிறிலங்காவின் 60 ஆண்டுகளுக்குத் தேவையான சக்தி தேவை பூர்த்தி செய்ய முடியும்.

பெற்றோலிய இருப்பைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பாக, பெற்றோலியக் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவினால் விசாரிக்கப்பட்ட போது இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

மன்னார் கடற்படுக்கையில் உள்ள எண்ணெய் வளத்தை தோண்டியெடுப்பதற்கு, 59 மில்லியன் தொடக்கம், 1 பில்லியன் டொலர் வரையிலான, செலவு ஏற்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மன்னார் கடற்படுக்கையில், எண்ணெய் அகழ்வில் ஈடுபடுவதற்குப் பொருத்தமான முதலீட்டாளரைக் கண்டறியும் முயற்சிகளில், பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் செயலகம் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.