Breaking News

நவீன துப்பாக்கிகளை வழங்குமாறு வடமாகாண சபை உறுப்பினர்கள் வேண்டுகோள்


வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு
வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு மீளப்பெறப்பட்டிருக்கும் நிலையில் எமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்றால் எமக்கு நவீன துப்பாக்கிகளை வழங்குங்கள் என வடமாகாண சபை உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாகாணசபையின் 11வது அமர்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்த போதே மாகாணசபை உறுப்பினர்கள் குறித்த கோரிக்கையினை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானத்திற்கும் விடுத்திருக்கின்றனர். மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும், கஜதீபன், சுகிர்தன் ஆகியோருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு அமைச்சரவை பாதுகாப்பு பிரிவு பாதுகாவலர்கள் வழங்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் குறித்த பாதுகாப்புக்கள் அனைத்தும் மீளப்பெறப்பட்டிருக்கும் நிலையில் முதலமைச்சருக்கான பாதுகாப்பு மட்டும் தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் இன்றைய அமர்வின்போது தாம் மிகுந்த அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில், அரசியல் பணியினை தொடர்ந்து கொண்டிருப்பதாக பாதுகாப்பு நீக்கப்பட்டிருக்கும் மாகாணசபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மாகாணசபையில் இருக்கும் சிங்கள மாகாணசபை உறுப்பினர்களுக்கும், இலங்கையில் உள்ள பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பாதுகாப்பு வழங்கப்படுகின்ற நிலையில் எதற்காக எமக்கு பாதுகாப்பு வழங்க முடியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அவ்வாறு பாதுகாப்பு வழங்க முடியாவிட்டால் நவீன துப்பாக்கிகளையும், அவற்றைக் கையாள்வதற்கான பயிற்சிகளையும் எங்களுக்கு வழங்குங்கள் என கேட்டிருக்கின்றனர்.

மேலும் அனந்தி சசிரதன் உரையாற்றும்போது பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில் தனக்கோ, தன் பிள்ளைகளுக்கோ அதனால் பாதிப்பு உண்டாகுமானால் அதற்கு வடக்கு மாகாணசபை பொறுப்பேற்க வேண்டும் எனவும் சபையில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.