Breaking News

'எழிலன் உள்ளிட்டோரின் வழக்கு சிறப்பு நீதவான் முன்னிலையில்'


இலங்கையில் விடுதலைப் புலிகளின்
திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்து, இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்ததன் பின்னர் தகவல் தெரியாதுபோன எழிலன் உள்ளிட்ட 12 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைகள் சிறப்பு நீதவான் ஒருவர் முன்னிலையிலேயே முல்லைத்தீவில் நடத்தப்படும் என்று திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட இந்த வழக்குகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சம்பவங்கள் முல்லைத்தீவிலேயே நடந்துள்ளமையால், அவை பற்றிய விசாரணைகளை நடத்தி விபரங்களை அறிவிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அந்த விசாரணைகள் சிறப்பு நீதவான் ஒருவர் முன்னிலையில் நடைபெறும் என்று அறிவித்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் கணேசராஜா, அந்த விசாரணைகளை வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

எழிலனின் மனைவியான வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட வழக்காளிகள் இந்த வழக்கு விசாரணைக்காக அங்கு சென்றிருந்தனர்.

அவர்களை புலனாய்வுத் துறையினர் என சந்தேகிக்கப்படுகின்ற பல நபர்கள் புகைப்படங்கள் எடுத்ததுடன், முல்லைத்தீவில் இருந்து பரந்தன் செல்லும் வீதியில் உள்ள முக்கிய சந்திகளில் ஆங்காங்கே காவல் இருந்து தம்மை அச்சுறுத்தும் வகைளில் சந்தேகத்திற்கு இடமாக நடந்துகொண்டதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

இவ்வாறான கண்காணிப்பு அச்சுறுத்தல்கள் புதுக்குடியிருப்பு நகருக்கு அப்பால் உள்ள வள்ளிபுனம் வரைக்கும் தொடர்ந்ததால், தாங்கள் மீண்டும் புதுக்குடியிருப்பு நகருக்குத் திரும்பி வந்து காவல்துறையினரிடம் முறையிட்டு பின்னர் யாழ் பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டு காவல்துறையினரின் வழிப்பாதுகாப்பைப் பெற்றுச் சென்றதாகவும் அனந்தி சசிதரன் கூறினார்.

தாங்கள் தாக்கல் செய்துள்ள வழக்குகளைத் தொடரவிடாமல் நிறுத்தும் வகையிலேயே இவ்வாறான அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், ஏற்கனவே விசாரணைகள் மிகவும் தாமதமாக்கப்பட்டுள்ள இந்த வழக்குகளின் மூலம் தங்களுக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.