Breaking News

கூட்டமைப்புக்குள் குழப்பமில்லை தமிழரசு கட்சியின் தலைமையில் மாற்றம்?


அரசாங்கம் ஏனைய கட்சிகளைப் பிரித்து,
துருவப்படுத்தி வெற்றி கண்டது போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பிளவுபடுத்த நினைக்கின்றது. அதற்காக சில ஊடகங்களையும் பயன்படுத்த முனைகின்றது.

கூட்டமைப்பை பிளவுபடுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி ஒரு போதும் பலிக்காது. கூட்டமைப்பு தமிழ் மக்களின் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட ஓர் கட்சியாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழத் தேசியக் கூட்டமைப்பு இரண்டாகப் பிளவுபட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரான இரா.சம்பந்தன் மேலும் கூறுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் எந்த விவகாரம் தொடர்பிலும் எந்தவித பிளவுமின்றியே தனது ஒருமித்த செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றது.

கூட்டமைப்பைப் பிளவுபடுத்த வேண்டுமென்பதில் அரசாங்கம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்தது. எனினும் அது சாத்தியமாகவில்லை.

தமிழரசுக் கட்சியின் பேராளர் மாநாடு புரட்டாசி மாதம் நடைபெறவுள்ளது. இந்தப் பேராளர் மாநாட்டில் எமது மாவட்டம் தோறும் உள்ள கிளைகள் மற்றும் பேராளர்கள் ஒன்றுகூடுவார்கள். இவர்கள் ஒன்று கூடி ஏகமனதான தீர்மானங்களை மேற்கொள்வார்கள்.

என்னைப் பொறுத்தமட்டில் நான் தமிழரசுக் கட்சியின் தலைவராகக் கடந்த மூன்று வருடங்களாக இருந்து வருகிறேன். அந்த வகையில், எனது பொறுப்புக்களை வேறு ஒருவரிடம் ஒப்படைக்கலாம் என்று கருதுகிறேன். அது தொடர்பில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், பேராளர்கள் ஒன்று கூடி இணக்கமான முடிவுக்கு வருவார்கள். 

இதன் மூலம் ஒரு போதும் பிளவுபடவோ, பிரச்சினைகள் எழவோ இடமில்லை. கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவரும் பதவி மோகத்தைக் கொண்டவர்கள் அல்ல. அவர்கள் தமிழர்களின் ஈடேற்றத்துக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் கூட்டமைப்பை பிளவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் பயனற்ற ஒன்றாகவே அமையும். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. அது தொடர்பில் சாதகமாகப் பரீசிலிக்கப்படும்.

எப்படியாவது கூட்டமைப்பை பிளவுபடுத்தி தமிழ் மக்களை அரசியல் அநாதைகளாக்கலாம் என்று அரசு கங்கணம் கட்டி செயற்படுவதையே காண முடிகின்றது. அதற்கு கட்சியோ தமிழ் மக்களோ ஒரு போதும் இடமளிக்க மாட்டார்கள் என்பதே யதார்த்தமாகும் என்றார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டணியில் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டுமென சில உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர் என்றும் மேலும் சிலர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளரொருவரை நிறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளதால் இந்தப் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும், பிரதான இரு கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் ஆதரவு வழங்குவதால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஒரு வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தி தமிழர் மக்களின் பலத்தைக் காட்டுவதுடன் கூட்டமைபைச் சேர்ந்த எம்.பிக்கள் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு நிபந்தனையுடன் ஆதரவு வழங்க வேண்டுமெனக் கருதுகின்றனர்.

இந்த நிலையின் கீழ் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கடும் கருத்து மோத்ல்கள் ஏற்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.