Breaking News

கைதான பல்கலை மாணவன் பயங்கரவாதி எனக்கூறி நாலாம்மாடிக்கு!

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

சபரகமுவ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து சக மாணவர்கள் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். அதேவேளை அவரது கைது குறித்து பெற்றோர், மனித உரிமைகள் ஆணையத்திடம் முறைப்பாடும் செய்துள்ளனர்.

அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த யோகநாதன் நிரோஜன் என்ற மாணவரே பலாங்கொடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கு கல்வி பயிலும் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என உயிரச்சுறுத்தல் விடுத்து கொச்சைத் தமிழில் எழுதப்பட்ட எச்சரிக்கை சுவரொட்டிகள் கடந்த ஜுலை மாதம் 20 ஆம் தேதி மாணவர் விடுதி கழிப்பறையில் ஒட்டப்பட்டிருந்தன.

இதேபோன்று கடந்த ஞாயிறன்று அதிகாலை 3 மணியளவில் இத்தகைய சுவரொட்டிகளை முகமூடி அணிந்த நபர்கள் ஒட்டிக்கொண்டிருந்தபோது கழிப்பறைக்குச் சென்ற தமிழ் மாணவன் ஒருவர் தாக்கப்பட்டிருந்தார். புதிய சுவரொட்டிகளும் அங்கு ஒட்டப்பபட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாகவே இரண்டாம் வருடத்தில் பயிலும் மாணவன் நிரோஜன் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. நிரோஜன், விடுதலைப்புலிகளினால் பிடித்துச் செல்லப்பட்டு அவர்களிடமிருந்து தப்பி வந்து குடும்பத்துடன் வசித்து வந்ததாகக் கூறும் அவரது பெற்றோர்,

யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர், அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் அனைவருக்கும் புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்ற அரசாங்கச் செயற் திட்டத்திற்கு அமைவாக தமது மகனும் புனர்வாழ்வு பயிற்சி பெற்றிருந்தார் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

அவ்வாறு பயிற்சி பெற்ற பிறகு, இவர் தற்போது சபரகமுவ பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றார். கைது செய்யப்பட்ட மாணவன் நிரோஜன் மேல் விசாரணைக்காகக் கொழும்புக்குக் கொண்டு செல்லபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அங்கு அவரை, நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், தங்களை உடனடியாகக் கொழும்புக்கு வருமாறு காவல்துறையினர் வியாழன் மாலை அறிவித்ததையடுத்து, தாங்கள் கொழும்புக்குச் செல்வதாகவும் அந்த மாணவனின் தாயார் யோகநாதன் மல்லிகாவதி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளுடன் இணைந்திருந்து பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட அந்த மாணவனுடைய கைத்தொலைபேசியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சில தகவல்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தே அவர் பங்கரவாதப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த விசாரணைகளில் அவர் பயங்கரவாதத்துடன் தொடர்படையவர் என்று கண்டுபிடிக்கப்பட்டால், அவர் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.

மாணவன் கைதானமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பெலிஹுல்ஓயா, பம்பஹின்ன சந்தியில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு அருகிலிருந்து பதுளை – கொழும்பு வீதியின் பம்பஹின்ன சந்தி வரை எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியிலும் மாணவர்கள் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார். 

இதுகுறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹணவிடம் வினவிபோது, குறிப்பிட்ட மாணவன் சட்டத்தில் காணப்படுகின்ற ஏற்பாடுகளுக்கு அமைய பல்கலைக்கழக வளாகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டார் என்பதை சுட்டிக்காட்டினார்.

கைதான மாணவனை மீண்டும் காணக்கிடைக்காது என பொலிஸார் தெரிவித்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்தும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவியபோது, அவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதென குறிப்பிட்ட அஜித் ரோஹண, சக மாணவர்கள் மற்றும் அருகிலிருந்தவர்களுக்கு அறிவித்த பின்னரே கைது நடவடிக்கை இடம்பெற்றதாக மேலும் தெரிவித்தார்.