மாவீரர் நாளுக்கு எதிரான கெடுபிடிகளை தடுக்க விசேட பயிற்சி பெற்ற இராணுவ அதிகாரி பணிப்பு
2009ம் ஆண்டின் பின்னர் மாவீரர் நாளினை மக்கள் நினைவு கூர்வது என்பது பெரும் சவாலான ஒன்றாகிவிட்டது. இருப்பினும் பல மக்கள் வீடுகளில் விளக்கேற்றி நினைவுகூர்கின்றனர். இராணுவ கெடுபிடிகளையும் தாண்டி யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் வருடாவருடம் தீபமேற்றி கொண்டாடுகின்றனர்.
இதனால் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இராணுவத்தினரின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் அமெரிக்காவில் பயிற்றப்பட்ட மேஜர் ஜெனரல் உதய பெரேரா ஈடுபடுத்தப்பட்டுள்ளார். உதய பெரேரா, 2012ம் ஆண்டு அமெரிக்க இராணுவ போர் கல்லூரியில் பயிற்சி பெற்று விருதும் பெற்றார்.
2009ம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர், வெளிநாடுகளில் பயங்கரவாத தடுப்பில் ஈடுபடுத்தப்பட்டார். இந்தநிலையில் அவரின் பணிப்புரையின் பேரில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அருகில் இரண்டு கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாச்சிமார் கோயிலடி மற்றும் கலட்டி சந்தி ஆகிய இடங்களிலேயே இந்த கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் பல்கலைக்கழகத்தின் 500 மீற்றர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 27ம் திகதியன்று பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர் நாளை நினைவுகூருவர் என்ற அச்சத்திலேயே இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தவிர, உதய பெரேராவினால்,யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் உள்ள புலனாய்வு அதிகாரிகள் பலாலிக்கு அழைத்து வரப்பட்டு மாவீரர் தின நிகழ்வுகளை தடுக்கும் முனைப்புக்கள் குறித்து பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து இராணுவ வீரர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பல்கலைக்கழக வீதியில் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் நிர்வாகத்திடம் இருந்து எதிர்ப்புக்கள் வரும் என்பதால், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை இந்த தடவை மாவீரர் தின நாட்களில் மூட துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் இணக்கம் வெளியிடவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வருடம் இந்த நாட்களில் பல்கலைக்கழகம் மூடப்பட்ட போது அரசரட்ணம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.







