Breaking News

யாழில் சமாதானப் புறாவை பறக்கவிட்டார் சந்திரிக்கா

பொது எதிரணியின் தேர்தல் பிரசாரக்கூட்டம் வடக்கில் இன்று ஆரம்பித்துள்ளது.
எனினும் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி இனப்பிரச்சினை பற்றியோ தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் பற்றியோ வாய் திறவாது வடக்கினை கடந்து சென்றுள்ளார்.

அதே வேளை தமக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள கூட்டமைப்பிற்கு நன்றி தெரிவித்த மைத்திரி எனினும் கூட்டமைப்புடன் எழுத்து மூலமாகவோ வாய் மொழி மூலமாகவோ எந்தவொரு உறுதி மொழியினையும் தான் வழங்கியிருக்கவில்லையெனவும் கூட்டமைப்பும் அவ்வாறு எதனையும் கோரியிருக்கவுமில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

பொதுஜன ஜக்கிய முன்னணியினருக்கு பிடி கொடுத்துவிடக்கூடாதென்பதில் கூடிய முனைப்பாக இருந்த மைத்திரி நாடாளாவிய ரீதியில் குடும்ப அரசியலால் மக்கள் படும் துன்பங்களை பற்றியே பேசியிருந்தார்.முன்னதாக வவுனியா வைரவர் புளியங்குளத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் இன்று 11.30 க்கு அவர்களது பிரச்சாரம் ஆரம்பமாகியிருந்தது.










ரிஷாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்தத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பொது எதிரணியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.தொடர்ந்து மன்னாரில் பொது எதிரணியின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டம் மன்னார் தனியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இதன்போது எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், ரவி கருணாநாயக, ராஜித சேனாரத்தின ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் முத்திரை சந்தியிலுள்ள கேணல் கிட்டு பூங்காவினில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தினில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மற்றும் இராணுவ தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா ஆகியவர்களும் இணைந்து கொண்டிருந்தனர்.

சுமார் நாலாயிரத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டிருந்தனர். குறிப்பாக கூட்டமைப்பினர் மேடையேறாத பிரச்சார கூட்டத்தினில் மைத்திரி தரப்பின் கருத்தை அறிந்து கொள்ளவே மக்கள் கூடிய அளவினில் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.