Breaking News

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மைத்திரிக்கு ஆதரவு

சமூகநீதிக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் என்பன எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கே தமது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளனர். 


இதேவேளை யாழ். பல்கலைகழக மாணவர்கள், தமிழ் புத்திஜீவிகள் மற்றும் பொதுநலன் விரும்பிகள் மாற்றத்திற்கு கடுமையாக உழைக்குமாறு கோரிக்கையும் விடுத்துள்ளனர். 

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று சனிக்கிழமை (03) மாலை யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் அ.இராசகுமாரன் தலைமையில் நடைபெற்றது. அவ் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றினையும் வழங்கி இருந்தனர். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது, 

தமிழர்கள் ஏன் அரசியல் மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும்? இலங்கையில் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பாரம்பரியமாக நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு, சிங்கள மக்களுக்கு சமமாக அனைத்து அரசியல் பொருளாதார உரிமைகளை பெற்று வாழும் உரிமை உண்டு. 

இது மறுக்கப்பட்டது மட்டும் அல்ல தமிழ் இனத்தை அழிப்பதற்கு பல இன ஒடுக்கு முறைகள் கடந்த காலத்தில் நடை பெற்றன. ஆனால் ஒடுக்கு முறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக போராட்டங்கள் ஆயுத முனையில் அடக்கப்பட்டதன் காரணமாக தமிழர்கள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள். 

புலிகளை அழித்து கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பதவியில் இருந்து வரும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருந்தும் தமிழருக்கான அரசியல் உரிமை வழங்குவதில் தடையாக எந்தப் பயங்கரவாதமும் இல்லாத போதும், யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கடந்த நிலையிலும், அரசியல் தீர்வுக்கான எந்த ஓர் முயற்சியும் எடுக்கவில்லை. 

தமிழர் தரப்பு ஒன்று தற்போதைய ஜனாதிபதியுடன் மிக இறுக்கமான உறவை கொண்டிருந்தது. எனவே அரசின் தமிழ் தோழமைக் கட்சிகளுடன் இணைந்தாவது இந்த நாட்டில் தமிழர்களின் அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டு இலங்கை தீவில் நிரந்தரமான அமைதி ஏற்பட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

அனைத்துக் கட்சி மாநாட்டுக்கு தமிழ் கூட்டமைப்பு பங்குபற்றவில்லை என்பது எல்லாம் நொண்டிச் சாட்டாகும். கூட்டமைப்பு ஏற்கனவே பங்கு பற்றி கால இழுத்தடிப்பால் விலகிக் கொண்டது. 

இப்படிப்பட்ட அணைத்து அதிகாரங்களையும் பாராளுமன்ற நிறைவேற்று அதிகாரத்தையும் கொண்டிருந்த ஜனாதிபதியாலேயே தமிழர் பிரச்சினைக்கு கடந்த இரண்டு பதவிக் காலத்திலும் தீர்வு காணப்படவில்லையாயின் எதிர்காலத்தில் மீண்டும் பதவி ஏறினாலும் அவர் எதுவுமே செய்யமாட்டார் என்பது வெளிப்படையாகின்றது. 

13வது திருத்தத்தில் வடக்கு, கிழக்கு இணைந்து இருந்தது. தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை ஓரளவுக்கு பூர்த்தி செய்திருந்தது. இது தற்போதைய ஜனாதிபதியின் காலத்தில் பிரிக்கப்பட்டது. 

பல்கலைக்கழக நிர்வாகத்தில் முன்னரை விட அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன. 

கடந்த காலத்தில் வாக்குறுதிகள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் எதுவும் செய்யாத தலைவர்களை விட வெளிப்படையாக எதுவும் கூறாத புதிய தலைவர், என்ன செய்யப் போகின்றார் என்ற கேள்வி எம் மக்கள் பலரிடம் இருக்கின்றது. 

கடந்த 15 ஆண்டுகளாக எதுவும் செய்யாது அடக்கு முறையை அதிகரித்து தமிழ் மக்கள் மூச்சுக் கூட விட முடியாது அவர்களை அடக்கிய தலைவரை விட புதிய தலைவர் ஒருவருக்கு சந்தர்ப்பத்தை வழங்கி அவர்களுடன் சேர்ந்து ஆட்சியில் பங்கு கொண்டு, புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி, எமது உரிமைகளை புதிய வழியில் பெற ஏன் முயற்சிக்க கூடாது. 

உரிமைகளை பெற்றோமோ, இல்லையோ, அழிவடைந்து கொண்டு இருக்கும் எங்கள் இனத்தை அழிவின் விழிம்பில் இருந்து நிலைமையை மோசமாக செல்ல விடாது தடுப்பதற்கு புதிய ஒருவருடன் நாம் ஏன் கூட்டு சேரக் கூடாது.

புதிய தலைவர் மைத்திரியானால் இலங்கைத் தீவில் சிறுபான்மை மக்களுக்கு பெரியளவில் நன்மை சேராவிட்டாலும், சிறுபாண்மையினரை அழிக்க முற்படும் பேரினவாதத்தில் இருந்து அழிப்பின் வேகத்தை ஓரளவுக்காவது கட்டுப்படுத்தி அடுத்த நகர்வுக்கான தளத்தை அமைப்பதற்க்கு ஆட்சிமாற்றம் அவசியமாகும். 

பலமுறை வாக்களித்து, வாக்களிக்காது விட்டு ஏமாந்து அடிமைப்பட்டுப் போன தமிழினம் ஏற்கனவே ஏமாற்றியவர்ருக்கு வாக்களிக்காமல் புதியவர் ஒருவரை தெரிவு செய்ய ஒன்றிணையுமாறும் தவறாது வாக்களிக்குமாறும் யாழ்ப்பான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எமது மக்களை அன்பாக கேட்டுக் கொள்கின்றது, என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.