Breaking News

10 நிபந்தனைகளின் அடிப்படையில் தேசிய அரசாங்கத்தில் இணையும் சுதந்திரக் கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் உள்ளடக்கிய வகையில் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள இலங்கையின் புதிய அரசாங்கம் சில அமைச்சுகளையும் உருவாக்கவுள்ளது.

இதனடிப்படையில் மனித உரிமைகள் விவகாரத்துக்குப் பொறுப்பாக தனி அமைச்சு அமைக்கப்படவுள்ளது. அத்துடன், அரசு மீது அதிருப்தியில் இருக்கும் ரஜீவ விஜேசிங்கவுக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கு பிரதமரும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கு தீர்மானித்திருந்த சுதந்திரக் கட்சி, தற்போது நிபந்தனைகளுடன் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நிலைப்பாட்டில் உள்ளதாக தெரியவருகிறது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையில் மாற்றம் செய்யப்பட்டாலும், பாதுகாப்பு, காணி அதிகாரம், உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் ஜனாதிபதியின் கீழ் இருக்கவேண்டும் என்பது உள்ளிட்ட 10 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.