கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி பதவி வழங்கக்கூடாது - உதய கம்மன்பில
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படக்கூடாது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார மற்றும் மேல்மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று தேசிய புத்தகசாலை கேட் போர்கூடத்தில் நடைபெற்றது.
இதில் கருத்துத் தெரிவிக்கும்போதே உதய கம்மன்பில இவ்வாறு கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவது இனவாதத்தை தோற்றுவிக்கும். கடந்த காலத்தில் அமிர்தலிங்கத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியதன் மூலம் ஏற்பட்ட விளைவுகள் பற்றி அறிவோம். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நல்ல விடயங்களை விட கெட்ட விடயங்களுக்கு கூடுதல் அளுத்தம் கொடுத்து பெரிதாக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கினால் பிரதமரை விட எதிர்க்கட்சித் தலைவரே பிரபலமடைவதுடன், சர்வதேச ரீதியில் எதிர்க்கட்சியின் பிரசாரம் வெற்றியளித் துவிடும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் நிலையில் தினேஷ் குணவர்த்தனவுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் வலியுறுத்தினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டாலும், அவர்கள் தேசிய நிறைவேற்று சபையில் அங்கத்துவம் வகிப்பதுடன், அரசாங்கத்துடன் இணைந்து தீர்மானங்களை எடுக்கின்றனர். எனவே இக்கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டால் அரசாங்கத்தின் செயற்பாடுகளை இவர்கள் கொடுக்க மாட்டார்.
அதேநேரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிலர் அரசாங்கத்தில் இணைந்திருப்பதால் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியாது. அவ்வாறு இருந்தாலும் அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் அவர்களால் விமர்சிக்க முடியாது. இரண்டு பக்கத்திலும் கால்களை வைத்துக்கொண்டிருக்க எவராலும் முடியாது. எனவே எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு வழங்கக்கூடிய பொருத்தமான நபர் தினேஷ் குணவர்த்தனவே என விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் வலியுறுத்தினர்.








