Breaking News

மகிந்தவின் யாழ்.மாளிகை ஹோட்டலாக உருப்பெறுகிறது


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ யாழ்ப்பாணத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் கோடிக்கணக்கான ரூபா செலவில் கட்டியுள்ள சர்வதேச மாநாட்டு மத்திய நிலையம் போன்ற அரச மாளிகையைப் பார்த்து அதிர்ந்துபோனதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. அந்த மாளிகையை 6 நட்சத்திர ஹோட்டலாக மாற்றப்போவதாகவும் தெரிவித்தார்.

 கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று இலவச திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். 

 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

 யாழ்ப்பாணத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அரச மாளிகையொன்றைக் கட்டியுள்ளார். 200 ஏக்கர் நிலப்பரப்பில், கோடிக்கணக்கான ரூபா செலவில் இந்த மாளிகை கட்டப்பட்டுள்ளது. அந்த மாளிகையில் 10 அறைகளும், இரண்டு சாப்பாட்டு அறைகளும், ஒரு சமையலறையும் உள்ளன. சமையறையிலிருந்து சாப்பாட்டு அறைக்கு அரை மைல் தூரம் உள்ளது. 

அப்போது எங்கே சுடச்சுட சாப்பிடுவது? ஜனாதிபதிக்கென பெரிய அறையொன்று உள்ளது. அந்த அறையில் ரயில் நிலையத்தையே அமைத்துவிடலாம். அவரது மனைவிக்கு அதேபோல் பெரிய அறையொன்று உள்ளது. ஜனாதிபதிக்கென மேலும் 4 சுகபோக அறைகளும் உள்ளன. அவருக்கென தனியான நீச்சல் தடாகம் ஒன்றும் உள்ளது. நான் உலகில் பல ஹோட்டல்களுக்குப் போயிருக்கின்றேன். 

இந்த மாளிகையை வாய்திறந்து பார்த்துக்கொண்டிருந்தேன். பேசுவதற்கு ஒரு வார்த்தைகூட வரவில்லை. கோடிக்கணக்கான ரூபா செலவழித்து அங்கு மாளிகை அமைப்பதைவிட, இளைஞர்களுக்கு, இலவசமாக சேவையையாவது வழங்கியிருக்கலாம். இது கிட்டத்தட்ட ஒரு சர்வதேச மாநாட்டு மத்திய நிலையம்போல உள்ளது. காங்கேசன்துறைக்கு ஏன் சர்வதேச மாநாட்டு மத்திய நிலையம் என்று நான் கேட்கிறேன். ஜனாதிபதியுடன் பேசி இதை 6 நட்சத்திர ஹோட்டலாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்