இன்று யாழ் வருகிறார் ஜனாதிபதி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இன்று வடக்கிற்கு விஜயம் செய்து, உயர்பாதுகாப்பு வலயங்களிலிருந்து விடுவிக்கப்படும் நிலங்களை மக்களிடம் கையளிக்கின்றனர்.
25வருடங்களின் பின்னர் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்ட வளலாய் பகுதியை உத்தியோக பூர்வமாக அவர்களிடத்தில் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இவர்கள் செல்லவுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அரசாங்கம் அமையப்பெற்றதன் பின்னர் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்கள் மீண்டும் மக்களிடத்தில் கையளிக்கப்படும் என கூறப்பட்டது. அத்துடன் வடக்கில் இராணுவத்தின் உயர்பாதுகாப்பபு வலயங்கள் அமைந்துள்ள நிலப்பரப்பில் 1100ஏக்கர் பரப்பளவுடைய நிலப்பரப்பு பொதுமக்களிடத்தில் விரைவில் கையளிக்கப்படும் என மிள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தனது யாழ்.விஜயத்தின்போது உறுதியளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து 1990ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாததாரண சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்த இப்பிரதேச மக்கள் தமது சொந்த நிலங்களை இழந்திருந்தனர். அவற்றை பார்வையிடுவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள வளலாய் கிராம சேவகர் பிரிவிலுள்ள 232ஏக்கர் நிலப்பரப்பு பொதுமக்களின் பார்வைக்காக விடுவிக்கப்பட்டதுடன் வலி.வடக்கில் அச்சுவேலி வயாவிளான் பகுதியும் மக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த நிலப்பரப்பினை பூர்வீகமாகக் கொண்ட மக்களிடத்தில் அவர்களின் நிலங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, பிரதமர் ரணில்விக்கிரசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதியின் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு நேற்று மாலைவரை தனக்கு அழைப்பு வரவில்லை என வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் ஊடகச் செய்திகளை மாத்திரமே தான் அறிந்து வைத்திருப்பதாக கூறியுள்ளார்.