Breaking News

காணாமல் போனோர் விடயம்! விடுதலைப் புலிகள், படையினர் உட்பட 4 குழுக்கள் பொறுப்பு

யுத்த காலத்தில் நூற்றுக்கணக்கானோர் காணாமல்போன சம்பவங்களுக்கு இலங்கை படையினர் மற்றும் விடுதலைப் புலிகள் உட்பட குறைந்தது 4 வித்தியாசமான குழுக்கள் பொறுப்புக்கூற வேண்டும் என விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இலங்கையில் 1983 - 2009ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் காணாமல்போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, தனது இடைக்கால அறிக்கையை நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளது. 

ஓய்வுபெற்ற நீதிபதியான மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்த விசாரணைக் குழுவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்திருந்தார், என்பது குறிப்பிடத்தக்கது. 

வடக்கில் காணாமல் போன சம்பவங்களுக்கு பாதுகாப்பு படையினர் 30 வீதம் பொறுப்புக் கூறவேண்டும் எனவும் பலவந்தமாக காணாமல் போக செய்யப்பட்டமைக்கு விடுதலைப் புலிகள் 60 வீதம் பொறுப்புக் கூறவேண்டும் எனவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மீதமுள்ளவற்றுக்கு ஆயுதக்குழுக்களும் ஏனைய அடையாளம் தெரியாத குழுக்களுமே பொறுப்பு எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

காணாமல் போனவர்கள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 16,153 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. இவற்றில் 5,200 முறைப்பாடுகள் பாதுகாப்பு படைகளை சேர்ந்தவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து கிடைத்திருந்தன. அத்துடன் வாய்மொழி மூலமாக ஆணைக்குழுவுக்கு சுமார் 1,440 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன.