சர்வஜன வாக்கெடுப்பு அவசியமான சரத்துக்கள் நீக்கப்படும் - ரணில்
சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டுமென்ற வகையில் உயர் நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 19 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களை நீக்கிக்கொள்வதாக அரசாங்கம் நேற்று சபையில் அறிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள இரண்டு ஷரத்துக்களில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏழு பிரிவுகளை நீக்கி விட்டு பெரும்பான்மை பலத்துடன் சட்ட திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பத்தொன்பதாவது திருத்தம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை நேற்று வியாழக்கிழமை பாராளுமன்ற கூட்டம் ஆரம்பமானபோது சபாநாயகர் சமல் ராஜபக்ச அறிவிப்பை வாசித்தார். இதன் பின்னர் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதமர் சபையில் மேலும் உரையாற்றுகையில்-
“19 ஆவது திருத்தத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும். அத்தோடு இத்திருத்தத்தில் சில ஷரத்துக்கள் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்றும் உயர்நீதிமன்றம் தீர்மானம் வழங்கியுள்ளது. இதனை நீக்கி விட்டு சபையின் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றுவதற்கும் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்றும் பிரதமர் அறிவித்தார்
பிரதமரின் இவ்வறிவிப்பின் பின்னர் அதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரீஸ் கருத்து தெரிவித்ததார். “பத்தொன்பதாவது திருத்தம் அரசியலமைப்பிற்கு எதிரானது மட்டுமல்ல சட்ட விரோதமானது. எனவே இதனை ஏற்க முடியாது.
இத் திருத்தத்தில் நிறைவேற்று அதிகாரங்கள் எவ்வாறு எப்படி பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் மாற்றப்பட போகின்றன என்பது தொடர்பில் தெளிவான அர்த்தப்படுத்தல்கள் இத்திருத்தத்தில் வழங்கப்படவில்லை. அனைத்தும் முரண்பாடுகளாக உள்ளது. அரசியலமைப்பை மீறாத விதத்தில் திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஜே.ஆர். இன் அரசியலமைப்பு இன்றும் பலமுள்ளதாக உள்ளது. ஆனால் அதற்கு இணையாக வந்துள்ள 19 ஆவது திருத்தமானது அரசியலமைப்பிற்கு எதிரானதாகும். சட்டத்துக்கு முரணானதாகும். எனவே இதனை ஏற்றுக்கொள்ளள முடியாது. ஜனாதிபதி பிரதமருக்கும் இடையிலான அதிகாரங்கள் 86 ஆவது ஷரத்தின் கீழ் தெளிவாக குறிப்பிடவில்லை. எனவே தான் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென உயர்நீதிமன்றம் வியாக்கினம் வழங்கியுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் தன்னிச்சையாக மேற்கொள்ளும் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும். அதேவேளை சுயாதீன ஆணைக்குழுக்கள் மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். அதனை நாம் எதிர்க்கவில்லை வரவேற்கின்றோம். ஆனால் அத் திருத்தங்களை அரசியலமைப்பிற்கும் பாராளுமன்ற முறைமைக்கும் மற்றும் சட்டத்திற்கும் அமைவாக கொண்டு வந்திருக்க வேண்டும். இது வெறுமனே அரசியல் பிரச்சினையல்ல. நாட்டின் இறைமையுடன் தொடர்புபட்ட பிரச்சினையாகும்.
இதற்கான திருத்தங்கள் விவாதிக்கப்பட்டு ஒரேயடியாக கொண்டு வரப்படவில்லை. கட்டம் கட்டமாக இணைக்கப்பட்டுள்ளன.நீதிமன்றத்திற்கு இத்திருத்தம் முன்னெடுக்கப்பட்ட பின்னரும் புதிய திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. நாட்டு மக்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விடயங்கள் தெரியாதுள்ளது. பரந்தளவில் இது விவாதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பிரதமர் அதிகாரங்கள் விடயங்களில் பல்வேறு கட்சிகள் பல்வேறுபட்ட விமர்சனங்களை கொண்டுள்ளது.
இவ்வாறான முரண்பாடுகளால் நிறைந்து காணப்படும் திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பை வலியுறுத்தியுள்ளது என்றும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் எம்.பி. தெரிவித்தார்.
அதுரலியே ரத்ன தேரர் எம்.பி.
சர்வாதிகார அதிகாரங்கள் நீக்கப்பட்ட அர்த்தமுள்ள அரசியலமைப்பு திருத்தத்தையே நாம் எதிர்பார்க்கின்றோம். ஆனால் 19 ஆவது திருத்தத்தில் நாம் எதிர்பார்த்தது எதுவுமே இல்லை.
பிரதமர் எமது எதிர்பார்ப்புக்களை தகர்த்து தமக்கு அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் விதத்திலே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு இத்திருத்தம் தொடர்பிலான தீர்மானம் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் சிங்களம் தமிழ் மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும்.
இத்திருத்தம் தொடர்பாக மக்களுக்கு எதுவும் தெரியாது. ஐ.தே. கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இது தொடர்பாக தெளிவுபடுத்தப்படவில்லை.அத்தோடு இத் திருத்தம் சர்வஜன வாக்கெடுப்புக்கு தள்ளி விடும் நிலைமையை தோற்றுவித்துள்ளது. எனவே இதில் மீண்டும் அர்த்தமுள்ள திருத்தங்களை கொண்டு வந்து மீண்டும் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும் என்றார்.
சுசில் பிரேம் ஜயந்த எம்பி
இத்திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைத்து விட்டது. எனவே அது தொடர்பில் மீண்டும் நீதிமன்றம் செல்ல முடியாது. எனவே திருத்தம் தீர்மானம் அனைத்தும் தமிழ், சிங்கள மொழியில் அனைத்து எம்.பி.களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம்
இவ்விடயத்தை மீளவும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட கோருவது நடைமுறை சாத்தியமற்றதாகும். மீண்டும் நீதிமன்றத்தை நாட முடியாது சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கமையவே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
அநுர திசாநாயக்க எம்.பி.
அரசியலமைப்புக்குள்ளாகி சர்வதிகாரத்தை நிறைவேற்றுவதற்காக 18 ஆவது திருத்தத்தை அவசரமாக நிறைவேற்றிக்கொண்ட போது, 19ஐ இன்று எதிர்க்கும் அதற்கு சட்ட விளக்கம் தரும் பேராசிரியர் என்ன செய்தார்? அதன் போது கருத்துக்களை தெரிவித்திருக்கலாமே? திவிநெகும சட்ட மூலம் அவசரமாக பெயர் மாற்றப்பட்டு கொண்டு வரப்பட்ட போதும் கடந்த காலங்களில் தாமதிக்கப்பட்டது.
கட்டம் கட்டமாக 19 ஆவது திருத்தம் இணைப்புகளாக உள்ளது என கூறுபவர்கள் இந்த அரசியலமைப்பு 18 தடவைகள் திருத்தப்பட்டதை மறந்து விட்டனர். 19 ஆவது திருத்தம் ஜனநாயகத்துக்கான ஒரு திசைகாட்டி. எனவே தொழில் நுட்ப பிழைகளை பெரிதுபடுத்தி அதனை தடுக்க வேண்டாம் என்றார்.
தினேஷ் குணவர்த்தன எம்.பி.
அரசியலமைப்பில் திருத்தம் தேவை அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதற்கு பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறிய திருத்தங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக தீர்மானம் வழங்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது.
எனவே உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். 18ஆவது திருத்தத்தை ஒரே நாளில் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். ஆனால் நாம் 19ஆவது திருத்தத்தை விவாதத்திற்கு உட்படுத்தியே நிறைவேற்ற முயற்சிக்கின்றோம் என்றார்.
அமைச்சர் நவீன் திஸாநாயக்க
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் நீதிமன்றங்களுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டே நீதிமன்றத்தின் தீர்மானங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் இன்று எந்தவிதமாக அச்சுறுத்தலும் இல்லை. 18ஆவது திருத்தத்திற்கு நானும் வாக்களித்தேன். ஆனால் வாக்களித்தவர்கள் அனைவரும் மனச்சாட்சியை தட்டிக்கேளுங்கள் விருப்பத்துடனா வாக்களித்தீர்கள் என அப்போது உண்மை புரியும்.
இது தனி நபருக்கு அதிகாரத்தை வழங்கும் விடயமல்ல. பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. ரணில் அல்ல எவர் பிரதமர் பதவிக்கு வந்தாலும் அவருக்கு அதிகாரம் கிடைக்கும் என்றார்.
வாசுதேவ நாணயக்கார
18ஆவது திருத்தச்சட்டம் ஒழிக்கப்பட்டது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். அதனை வரவேற்கின்ற அதேவேளை 17வது திருத்தத்தினை மீண்டும் கொண்டு வந்து சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளமையையும் வரவேற்கின்றேன். அரசாங்கத்தின் 19ஆவது திருத்தத்தின் மூலம் இவைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
எனவே 19ஆவது திருத்தத்தில் பாரிய பிரச்சினைகள் எதும் இல்லை. இதனை பிரச்சினையாக்கிக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.








